#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Tuesday, March 30, 2010

அறிவு சமூகத்துக்கு பயன்பட வேண்டும் : பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ஆ.இராசா பேச்சு

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் செயல்பட்டுவரும் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக் கலை மற்றும் திட்டமிடும் கல்லூரி ஆகியவற்றில் 2009-ஆம் ஆண்டில் பயின்று தேர்ச்சி பெற்ற 124 தங்கப் பதக்க சாதனையாளர்கள் உட்பட 4151 மாணவர், மாணவியருக்கு பட்டமளிப்பு விழா மார்ச் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பல்கலைக் கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகர் தலைமை ஏற்றார். மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா முதன்மை விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் ஆ.இராசா பேச்சு:

அண்ணா பல்கலைக் கழகத் துனைவேந்தர் மன்னர் ஜவகர் அவர்களே, பதிவாளர் அவர்களே, துறை தலைவர்களே, பட்டம் பெறும் மாணவர் கண்மணிகளே, பேராசிரியர்களே, பத்திரிகையாளர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்.

அண்ணா பெயரால் சிறப்பாக செயல்படும் இந்த மாதிரி பல்கலைக் கழகங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும், ஆசையும் என் மனத்தில் எப்போதும் இருக்கிறது. இங்கு உரையாற்றுகிற வாய்ப்பை பெற்றமைக்காக துணைவேந்தருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

பெரும்பாலான பட்டமளிப்பு விழாக்களில் பேசுகிறவர்கள் மாணவர்களுக்கு ஒளியூட்டுகிற கருத்துக்களை மட்டுமே பகிர்ந்துகொள்வார்கள். நானும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் கருத்துக்களையோ, ஒளியூட்டுகிற கருத்துக்களையோ பேசி உரையை நிறைவு செய்ய விரும்பவில்லை.

பட்டமளிப்பு விழா ஒன்றில் அறிஞர் அண்ணா உரையாற்றுகையில், இளைஞர்களே சாதியை ஒழிக்க முன்வாருங்கள், அடக்கு முறைகளை ஒழிக்க முன்வாருங்கள். இவையெல்லாம் சகோதரத்துவத்திற்கும் சமத்துவத்துக்கும் எதிரானது என்று முழங்கினார். அண்ணாவின் பெயரால் செயல்படும் பல்கலைக் கழகம் என்பதால், அண்ணா கண்ட சமூகத்தை உருவாக்குவதற்கு தேவையான கருத்துக்களை உங்கள் முன் பகிர்ந்துகொள்ளலாமென எண்ணுகிறேன். அதே நேரத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றுவதை காட்டிலும், அனைவராலும் எளிதாக விளங்கிக் கொள்ள இயலும் என்பதால் தாய்மொழியான தமிழில் கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு படித்தவருக்கும், சிந்தனையாளருக்கும் வேறுபாடு இருக்கிறது. எல்லா படித்தவர்களும் சிந்தனையாளராக ஆக முடியாது. தான் கற்ற கல்வியை - அறிவை சமுதாயத்திற்காக பயன்படுத்துபவனே சிந்தனையாளன். மாணவர்கள் சிந்தனையாளர்களாக வர வேண்டும் என்று அண்ணா குரிப்பிட்டார். அண்ணா வழியில் வந்த இயக்கத்திற்கு தலைமையேற்று முதல்வர் கலைஞர் ஆட்சி செய்கிற இந்த காலக்கட்டத்தில் - மத்தியில் அமைச்சராக இருக்கும் நான், பாடத் திட்டங்கள் சொல்லும் கருத்துக்களே உரையாக இருக்க கூடாது என்று எண்ணுகிறேன்.

பருவ கால மற்றங்கள் பற்றி மத்திய அரசோ, பிற மாநில அரசுகளோ கண்டுகொள்ளாத நேரத்தில், நான் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது பருவக் கால மாற்றத்திற்கென தனி துறை ஒன்றை இந்த பல்கலைக் கழகத்தில் கலைஞர் உருவாக்கினார்.

இப்போது பருவ நிலை மாற்றம் நம்மை அச்சத்தில் மூழ்கடிக்கிறது. நான் ஒரு கல்லூரியில் பேசும்போது சொன்னேன்: நான் பள்ளிக்கு போகிறபோது வழியெங்கும் இருக்கிற தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் குடிக்க முடியும். என் மகள் பள்ளிக்கு போகிறபோது தண்ணீர் பாட்டில் கொண்டு போகிறாள். எல்லா இடங்களில் இயல்பாக கிடைக்கிற தண்ணீர் அசுத்தமானதால் பாட்டிலில் தண்ணீர் கொண்டுபோகிற நிலை வந்திருக்கிறது. எனக்கு இருக்கிற கவலையெல்லாம், இன்று என் மகள் தண்ணீர் பாட்டிலை கொண்டுபோகிறாள். என் மகளின் பிள்ளை சுவாசிப்பதற்கான காற்றை சிலிண்டரில் அடைத்து கொண்டு செல்கிற காலம் வரும் என்று குறிப்பிட்டேன். எனவே இது போன்ற சமூக அக்கறையை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. உற்பத்தி 5 விழுக்காடு, அது இன்றைக்கு 8 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. உலகமே பொருளாதார சரிவால் கதிகலங்கி போயிருக்கிற இந்த நேரத்திலும் கூட இந்தியா 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியில் இருக்கிறது. கட்டுமானத் துறையில் 47 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. தகவல் தொடர்பு துறையிலும் இந்தியா வளர்ந்திருக்கிறது.

நம் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களையும் 5 ஆண்டுகளில் ஒரு குடையின் கீழ் இணைக்கிற திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். நாம் அறிவியலில் உயர்ந்திருக்கிறோம், பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கிறோம், தொலைத் தொடர்பு துறையில் வளர்ந்திருக்கிறோம். இந்திய தொலைத் தொடர்பு துறை 1999ஆம் ஆண்டிலேயே 6 ஆயிரம் மில்லியன் இணைப்புகளை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது. அத்துறை 2 ஆண்டுகளுக்கு முன்னரே தனது இலட்சியத்தை நிறைவேற்றியிருக்கிறது. ஆனாலும் நாம் செல்லும் இடம் வெகு தொலைவில் இருக்கிறது.

ஒரு மனிதனின் அறிவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன்பட வேண்டும். இல்லையெனில் அவனை மனிதனென்று சொல்ல முடியாது. அவன் விலங்குக்கு சமம். காரணம், பகுத்தறிந்து எது நல்லதோ அதன்படி செயல்படுகிற ஆறாம் அறிவு மனிதகுலத்திற்கு மட்டுமே உரியது. விலங்குக்கு ஆறாம் அறிவு கிடையாது. இங்கு இருக்கிற இளைஞர்களில் எத்தனை பேருக்கு சமூக அக்கறை இருக்கிறது. பாடத் திட்டம் சிலுவை அல்ல, அதிலேயே அறைந்தபடி திரிய, பாடத் திட்டம் அலங்காரப் பொருளும் அல்ல, அதை சூட்டிக்கொள்ள, படிப்பு மட்டுமே வாழ்க்கையின் முற்றுப்புள்ளி அல்ல. அதை கடந்து சமூகம் பரந்து விரிந்திருக்கிறது.

புதிய அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருகிறார்கள். முன்னேற்றங்கள் நடைபெறுகின்றன. அரசியல் மாற்றம் மட்டுமே சமூக மாற்றமா என்றால் இல்லைவே இல்லை. 1980ஆம் ஆண்டில் பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது, இனி வறுமை இருக்காது என்று சொல்லி வறுமை ஒழிப்பு திட்டத்தை கொண்டுவந்தார். அதற்கு பிறகும் வறுமை ஒழிப்புக்கென பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த திட்டங்களுக்கெல்லாம் எதிர் மறை விளைவு ஏற்பட்டது. பொருளாதார மாற்றம் என்பது மாற்றம்தான், ஆனால் அது நிரந்தர மாற்றமல்ல. சட்டத்தின் மூலம் மாற்றத்தை கொண்டுவர புதிய சட்டங்களை இயற்றுகிறோம். அச்சட்டங்களால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் அவற்றால் பாதகங்களும் ஏற்பட்டிருக்கின்றன. சட்டங்களும் திட்டங்களும் சமூக வளர்ச்சிக்கு பயன்படுகிறவை என்றாலும் அவை மாறுதலுக்கு உட்பட்டவை. எனவே சமூக மாற்றத்திற்கு படிப்பை பயன்படுத்த வேண்டும். இதனை இளைஞர் சிந்திக்க வேண்டும்.

பெர்னாஷா சொன்னார்: சரித்திரத்தை கற்காதவன் சரித்திரத்தில் நிற்க முடியாது என்றார். நாமும் சரித்திரத்தை அறிந்து செயல்பட வேண்டும்.

இந்த உலகத்தில் நடக்கும் மாற்றங்கள் புதுமையானவை அல்ல. பழமையில் இருந்து சிறிது பிறழ்ந்து புதிய உருவாகிறது. இதனை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நியூட்டன் சொன்னார். நான் பேசுகிற இந்த ஒலிபெருக்கி, ஒரு உலோகம் வெட்டப்பட்டதில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மேடை, மரங்கள் வெட்டப்பட்டதில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த உலகமே ஐந்து பூதங்களால் ஆனது. இதை மாற்றவே இயலாது, பழயவை இல்லாமல் புதியதை சமைக்க முடியாது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் சொல்கிறது.

1866, 1882 ஆம் ஆண்டுகளில் டார்வின், மேண்டலின் ஆகிய இரண்டு அறிஞர்கள் சொன்னார்கள்: மனிதன் தானே தோன்றியவன் அல்ல, ஒரு பழைய உயிரில் இருந்து சில மாற்றங்கள் ஏற்பட்டு மனித உரு கிடைத்திருக்கிறது. இந்த உண்மையை மதங்கள் மறுக்கின்றன. உண்மைகளை கற்று பகுத்தறிவது மூலமே உணரலாம். அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டது.

இந்தியாவின் பெரும் அறிஞர்களாக இருந்தவர்களெல்லாம் செய்த கொடுமை என்னவென்றால் மற்றவர்களை படிக்கவிடாமல் செய்து தற்குறிகளாக வைத்திருந்தார்கள் என்று அம்பேத்கர் அறைந்து சொன்னார்.

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அவற்றொடு நாவே மூன்றறிவதுவ அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

இவ்வுலகில் ஆறுவகை உயிர்கள் இருக்கின்றன. அதில், ஆறாம் அறிவு மனிதனை சிந்திக்க தூண்டுகிறது. இதனை தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் பல நூறு ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டுள்ளார்.

நான் சட்டம் படித்தவன் ஆதலால் ஒன்றை சொல்கிறேன்: நீதிமன்ற சாட்சிய சட்டத்தில் நேரடி சாட்சி, ஆவண சாட்சி, வழக்க சாட்சி என்ற மூன்று வகை இருக்கிறது. அந்த மூன்று வகையில் ஓலையை சாட்சியாக கொண்டு வந்து திருமணத்தை நிறுத்தியதாக பெரிய புராணத்தில் இருக்கிறது. திராவிட இயக்கத்தில் இருக்கிறவர் பெரிய புராணத்தையும் கடவுளையும் மேற்கோள் காட்டி பேசுகிறேனே என்று எண்ணுகிறீர்கள். நாங்கள் கடவுள் இல்லை என்று சொல்லுகிறோம்; இந்த நாட்டை காப்பாற்ற கடவுள் இல்லையே என்ற வருத்தம் எங்களுக்கு உண்டு.

சேக்கிழாரின் பெரியபுராணத்தில் - திருத்தொண்ட புராணத்தில் - ‘தடுத்தாட கொண்ட புராணம்’ எனும் பகுதி உள்ளது. சுந்தரரின் திருமண நாளன்று ஊர் கூடியிருந்தது. ஆங்காங்கே அலங்காரங்கள், வாத்திய இசைகள் முழங்க மணமேடையில் வீற்றிருந்த அழகிய சுந்தரர், புரோகிதரின் மந்திரத்தைத் தொடர்ந்து மணமுடிக்க இருக்கும் தருவாயில் திருமணப் பந்தலுக்குள் ‘நிறுத்துங்கள்’ எனும் ஒலி அனைவரையும் ஆச்சர்யத்தில் திகழ்த்தியது. வயதான அந்தணக் கிழவன், நெற்றியில் திருநீறு பூசி, பூ நூல் அணிந்து இடது கையில் குடையுடன், மூங்கில் தண்டுடன் நிதானமாய் நடந்து வருகிறார். ஊர் மக்கள் ‘’ஐய நின் வரவு நல்வரவு ஆகுக’’ எனக் குரல் எழுப்பினர். வந்த கிழவனார் ஊர் மக்களிடம் முறையிட்டார். ‘’இந்த நாவல் ஊரன் எனக்கு அடிமை’’ என்று கூறி, அதற்குச் சுந்தரருடைய முன்னோர்கள் எழுதிக் கொடுத்த ஆவணத்தைச் சபையில் வைத்தார். ஆவண ஓலையைக் கண்ட சுந்தரர் பிடுங்கிக் கிழித்துப் போட, மீண்டும் மற்றொரு ஓலையைக் காட்டி சுந்தரர் தமக்கு அடிமை எனக் கூறித் திருமணத்தைத் தடுத்து சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவருட்துறைக் கோயிலை அடைந்து மறைந்தார். ஆக, ஆவண சாட்சி பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பெரிய புராணத்தில் இருக்கிறது.

சட்ட அறிவு, தொழில்நுட்ப அறிவு, கட்டடக் கலை அறிவு பெற்றிருந்த நாடு, இந்த நாடு. இதனை மாற்றங்களும், புதிய கல்வி மாற்றங்களும் உங்களை மறக்க வைத்திருக்கின்றன என்பதால் சொல்கிறேன். பட்டம் பெறுகிற நீங்கள், சமூக உணர்வு உள்ளவர்களாக மாறி, சமுதாயத்தில் நிலவும் கொடியவைகளை நீக்க வேண்டும். உங்களின் பட்டம் அண்டை வீட்டில் இருப்பவருக்காவது பயன்பட வேண்டும்.

தொலைதொடர்பு வளர்ச்சியால் உலகமே நெருக்கமாகிவிட்டது அண்டை வீடுகள் அந்நியமாகிவிட்டன

என்று ஒரு கவிஞர் சொன்னார். கூலி வேலை செய்து படிக்கவைத்த குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள், படித்து முடித்து அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். சொந்த ஊரில் இருக்கிற தாய் - தந்தையரை கண்டுகொள்வதில்லை.

ஈ மெயிலில் நீ மேய்ந்திருக்கிற நேரத்தில் என் உடலில் ஈ மொய்த்த சேதி உனக்கு வரும். உன் மீது நம்பிக்கையில்லை தபால்காரர் மீது நம்பிக்கையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
என்று அமெரிக்காவில் இருக்கிற மகனுக்கு ஒரு தந்தை கடிதம் எழுதியதாக இன்னொரு கவிஞர் எழுதினார்.

காதல் உள்ள இதயங்கள் இப்போது சுருங்கிவிட்டன. காதல் உணர்வு எல்லோருக்குமே தேவையானது. பால் உணர்வு மிருகங்களுக்கு போதும். பாச உணர்வு சகோதரர்களுக்கு போதும். பால் உணர்வும் பாச உணர்வும் சேரும் புள்ளியே காதல். ஆனால் இப்போது இளைஞர்கள் பலர் பால் உணர்வுடனே காதலிக்கிறார்கள். அதற்கு பெயர் காதல் அல்ல.

உன்னை பார்த்தபோது
முதல் ஆச்சரியம்
உன் வீட்டு நிலைக்கண்ணாடியை
பார்த்தபோது இரண்டாம் ஆச்சரியம்
உன் அழகில் உடையாமல் இருக்கிறதே..

இப்படி ஒரு இளைஞன் காதல் கவிதை எழுதுகிறான். கல்லூரி மாணவர்களுக்கு நடந்த கவிதை போட்டியில், ஒரு கல்லூரி மாணவி எழுதினார்:

என்னை
மானே என்றாய்..
மலரே என்று சொன்னாய்..
தேனே என்றாய்...
என்னை மனுசியாக
எப்போது பார்ப்பாய்..

என்று காதலனிடம் சொல்வதாக சிறப்பான எழுதினார். அந்தக் கவிதையில் பெண்களை இந்த சமூக வைத்திருக்கும் நிலையை சிந்திக்க தூண்டும் கருத்துக்களும், சமூக உணர்வு கருத்துக்களும் இருக்கின்றன.

நாம் செய்கிற ஒவ்வொரு செயலும் சக மனிதனுக்கும் சமூகத்துக்கும் பயன்பட வேண்டும். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் கிடைக்க வேண்டும். ஜனநாயகம் என்பது ஓட்டுக்களால் மட்டுமே உருவாக்கப்படுவது மட்டுமல்ல; மனிதனை உருவாக்கும் கூட்டு முயற்சி அது. சமூக அக்கறையுடன் இங்கிருந்து உங்கள் பயணம் தொடங்கட்டும்.

இந்த வாய்ப்பை அளித்த பல்கலைக் கழகத் துணைவேந்தர் உட்பட அனைவருக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

Read more...

Sunday, March 21, 2010

ஜெயலலிதாவால் வேறு என்ன கேட்க முடியும்: அமைச்சர் ஆ.ராசா

கோவை:
ஜெயலலிதாவுக்கு இருந்த இடத்தில் அறிக்கை விடுவதும், கடிதம் எழுதுவதும்தான் வேலை. என்னை பதவி நீக்க கேட்பதை தவிர ஜெயலலிதாவால் வேறு என்ன கேட்க முடியும் என்று அமைச்சர் ஆ.இராசா தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

கோவைக்கு மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா வந்திருந்தார். அவரிடம் ஜெயலலிதாவின் கடிதம் செய்தியாளர்கள் கேட்டதற்கு விடையளித்த அமைச்சர் ஆ.ராசா , ’’ஜெயலலிதாவுக்கு இருந்த இடத்தில் அறிக்கை விடுவதும், கடிதம் எழுதுவதும்தான் வேலை. என்னை பதவி நீக்க கேட்பதை தவிர ஜெயலலிதாவால் வேறு என்ன கேட்க முடியும்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆ.இராசா, தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடந்துள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளேன். பிரதமருக்கும் இது தெரியும். சட்டம், விதிமுறைகள் குறித்து தெரியாதவர்கள் பேசுவதற்கு என்ன சொல்ல முடியும்’’என்றும் கூறினார்.

Read more...

Saturday, March 20, 2010

புதிய பேரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராசா

புதிய பேரவை கட்டடத்தினுள் நேற்று நடைபெற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்டார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகமும், சட்டப்பேரவை வளாகமும் பிரம்மாண்டமாக கட்டிமுடிக்கப்பட்டு மார்ச் 13-ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.

புதிய சட்டசபையில், முதல்முறையாக, நிதி அமைச்சர் அன்பழகன், இந்த நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

புதிய பேரவை கட்டடத்தினுள் நேற்று நடைபெற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் நெப்போலியன், மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் நாகநாதன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தி.மு.க. தொழிற்சங்க நிருவாகி செ.குப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் பட்ஜெட் கோப்பு அடங்கிய பெட்டியை நிதி அமைச்சர் அன்பழகன் கொண்டுவந்து முதலமைச்சர் கலைஞரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது, மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநில அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரிய கருப்பன், சட்டப் பேரவை உறுப்பினர் இரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more...

தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் - கண்கவர் படங்கள்

வரும் நிதியாண்டில் செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் விவரம்:-

* அரசு கல்லூரிகளில் எம்.ஏ, எம்.எஸ்சி போன்ற முதுகலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கட்டணம் ரத்து.

* சென்னை அண்ணா சாலையில் உள்ள சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.500 கோடியில் மேம்பாலங்கள் கட்டப்படும்.

* 36 சமத்துவபுரங்கள் கட்டப்படும்.

* 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொருவருக்கும் இலவசமாக ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி, ரூ.10 கோடியில் வழங்கப்படும்.

* எழுத்தறிவு பெற்ற பெண்கள் குறைவாக இருக்கும் விழுப்புரம், பெரம்பலூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில், `படிக்கும் பாரதம்' என்ற பெண் கல்வி திட்டத்துக்கு ரூ.68 கோடி ஒதுக்கப்படும்.

* மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்காக மதுரையை தலைமையிடமாகக் கொண்டு அண்ணா தொழில்ட்பப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.

* விழுப்புரம், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையம் ஒன்று உருவாக்கப்படும்.

* புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மத்திய அரசு நிதியுடன் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

* மத்திய அரசு நிதியுதவியுடன் 7 புதிய பல்தொழில்ட்ப கல்லூரிகள் தொடங்கப்படும். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் ஒரு பலதொழில்ட்பக் கல்லூரியும் தொடங்கப்படும்.

* கடந்த 2 ஆண்டுகளில் அண்ணா தொழில்ட்ப பல்கலைக்கழகங்கள் மூலம் பண்ருட்டி, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடங்கப்பட்ட புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு தேவையான கட்டிடங்கள் ரூ.93 கோடியில் கட்டப்படும்.

* திருவண்ணாமலையில் ஒரு புதிய அரசு மருத்துவ கல்லூரி உருவாக்கப்படும்.

* ரத்தம் உறையாமை (ஹீமோபிலியா) நோய்க்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படும்.

* சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு விடுதிகளும், கூட்ட அரங்கும் ரூ.20 கோடியில் கட்டப்படும்.

* இராயப்பேட்டை மருத்துவமனையில் ரூ.17 கோடியில் 150 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வசதி கொண்ட புற்றுநோய் மையம் கட்டப்படும்.

* விழுப்புரம் மாவட்டத்தில் சிப்காட் மூலம் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்படும்.

* சென்னையில் ஆறுவழித்தட ராஜீவ்காந்தி சாலையில் முக்கிய சந்திப்புகளில் ரூ.171 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

* சென்னையை போலவே கோவையில் மேற்கு வெளிவட்டச்சாலை அமைக்கப்படும்.

* சென்னை கோயம்பேட்டில் நாளொன்றுக்கு 1.2 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம், ரூ.120 கோடியில் வரும் நிதியாண்டில் கட்டப்படும்.
* கர்ப்பிணிகளுக்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் அயோடின் கலந்த உப்பு இலவசமாக வழங்கப்படும்.

* வரும் நிதியாண்டில் 50 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்படும்.

* மாற்றுத்திறன் படைத்தோர் உயர்கல்வி பயில்வதற்கு, தனிக்கட்டணம் செலுத்தவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

* அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மாற்றுத் திறனாளி மாணவர் இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, உணவு உதவித்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தப்படும்.

* தேனியில் ரூ.10 கோடியில் ஒரு சிறப்பு அரசு மனநல மருத்துவமனை அமைக்கப்படும்.

* யானைக்கால் நோயாளிகளுக்கு (நான்காவது வகை) மாத உதவித்தொகையாக ரூ.400 வழங்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகளுக்கான தனி துறை, முதல்-அமைச்சர் மேற்பார்வையில் இயங்கும்.

* ஒரு லிட்டர் பதநீர் கொள்முதல் விலை ரூ.7-ல் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப்படும்.

* காதி நூல் நூற்பு மற்றும் நெசவாளர் நலவாரியம் அமைக்கப்படும்.

* அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் 50 ஆயிரம் இளைஞர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை மூலம் 42 ஆயிரம் இளைஞர்களுக்கும், மகளிருக்கும், பலதொழில்ட்ப கல்லூரிகள் மூலம் 35 ஆயிரம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.

* அரசு பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி படிப்பு பயிலும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

* வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டையில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும். * தேச விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த கோபால் நாயக்கரின் நினைவாக விருப்பாட்சியில் மணிமண்டபம் நிறுவப்படும்.

* தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமியின் சொந்த ஊரில் அவருக்கு ஒரு மணி மண்டபம் அமைக்கப்படும்.

* எம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
* கரும்பு விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் நடப்பு அரவை பருவத்துக்கு (2009-2010) கரும்பு டன் ஒன்றுக்கு மேலும் கூடுதல் விலையாக 100 ரூபாயை உயர்த்தி, ரூ.1,550-ல் இருந்து ரூ.1650 ஆக வழங்கப்படும். * 2009-2010-ம் ஆண்டில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்குப் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து, இதுவரை, ரூ.2013 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் இந்த இலக்கு ரூ.2,500 கோடியாக உயரும்.

* விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட 10,000 சுயஉதவி குழுக்கள் அமைக்கப்படும்.

Read more...

காலமெல்லாம் கலைஞர் புகழ்பாடும்... புதிய சட்டப் பேரவை கட்டடம்

"புதிய சட்டமன்ற வளாகம், காலமெல்லாம் கலைஞர் புகழ்பாடும்'' என்று, புதிய சட்டமன்றத்தில் 2010-11 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் அன்பழகன், கலைஞருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.

வெள்ளிக்கிழமை காலை 9.34 மணிக்குத் தனது பட்ஜெட் உரையை தொடங்கிய நிதியமைச்சர் அன்பழகன், கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து பேசியது வருமாறு :

"அரியவென்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்''

என்னும் திருவள்ளுவரின் குறளுக்கு எடுத்துக்காட்டாகத் தமிழக முதல்வர் கருணாநிதியின் மாபெரும் சாதனையாகத் திகழும் இந்த வானுயர் சட்டப்பேரவை மணிமாடம், தமிழ்நிலம் உள்ளளவும், முக்கடல் உள்ளளவும் நிலைபெற்று விளங்கிக் காலமெல்லாம் கலைஞரின் புகழ்பாடும் என்பதில் அய்யமில்லை. இந்தப் பேரவையினரின் ஒருமித்த வாழ்த்தினை கலைஞருக்கு தெரிவித்துக்கொள்ள நான் விழைகிறேன். இவ்வாறு நிதியமைச்சர் க.அன்பழகன் கலைஞருக்கு புகழாரம் சூட்டினார்.

Read more...

Monday, March 01, 2010

ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆ.இராசா வாழ்த்து

தமிழ் நாடு அரசின் துணை முதலமைச்சர் மு..ஸ்டாலின் 57ஆவது பிறந்த நாளை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சிகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

நடுவண் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் .இராசா, ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Read more...

‘எனதுயிர் இளந்தளிர்’ திட்ட தொடக்க விழா

கிராமிய அஞ்சல் காப்பீட்டின் ‘எனதுயிர் இளந்தளிர்’ திட்ட தொடக்க விழா, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்தது. இதில் காப்பீட்டுக்கான பாலிசியை மத்திய அமைச்சர் ராசா ஒரு பெண்ணுக்கு வழங்குகிறார். அருகில் அமைச்சர் சாமிநாதன் உள்ளார்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO