#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Saturday, December 26, 2009

சத்திய மங்கலத்தில் சார்பு நீதிமன்றம் - அமைச்சர் ஆ.ராசாவுக்கு நன்றி


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க பொதுமக்கள் தமிழக அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். நீலகிரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசா, மக்களின் கோரிக்கை குறித்து தமிழக சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக பரிந்துரை செய்தார். இப்போது சத்தியமங்கலத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக தமிழாக முதல்வர் கலைஞ்சர் மு.கருணாநிதி, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், நடுவண் அமைச்சர் ஆ.ராசா ஆகியோருக்கு ஈரோடு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் என்.கே.கே.பெரியசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் எல்.பி.தருமலிங்கம், ஊ.சுப்பிரமணியம் ஆகியோர் அப்பகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

Read more...

Monday, November 23, 2009

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்க முன்னெச்சரிக்கை: அமைச்சர் ஆ.ராசா


ஊட்டி, நவ. 23-
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர்- கோத்தகிரி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடுவண் அமைச்சர் ஆ. ராசா பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர்
குன்னூர், காட்டேரி, மரப்பாலம் வழியாக சின்ன குரும்பாடி எனும் ஆதிவாசி மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து வசதி எதுவும் இல்லாமல் அவதிப்பட்டு வந்த ஆதிவாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிரந்தர வீடு அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதையடுத்து பர்லியாருக்கு சென்ற அமைச்சர் ஆ.ராசா, பர்லியார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டு இருந்த மரப்பாலம், வடுகன்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில், பவானி ஆற்றின் கரையோரப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு இலவச வேட்டி, சேலை, நிவாரணத்தொகையை அமைச்சர் ஆ.ராசா வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் நிலச்சரிவுகள், பூமியில் பிளவுகள் ஏற்பட்டு உள்ளன. புவியியல் துறை துணை இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள குழுவினர் நிலச்சரிவு மற்றும் பூமி பிளவுக்கான காரணம் பற்றி ஆராய்ந்து, ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தர உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிருவாகத்தோடு கலந்து பேசி எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என ஆலோசிக்கப்படும். பின்னர் மேல்நடவடிக்கை தொடர்பாக நடுவண், மாநில அரசுகளை அணுகி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் ஆ.ராசா கூறினார்.

அமைச்சர்
ஆ.ராசாவுடன் தமிழக அமைச்சர் கா.இராமச்சந்திரன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்தரபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பா.மு.முபாரக், பா.அருண்குமார் மற்றும் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read more...

Saturday, November 21, 2009

நீலகிரியில் இனி கட்டடத் தடைச் சட்டங்கள் கடுமையாகும்: நடுவண் அமைச்சர் ஆ.இராசா சேதி


நீலகிரி, நவ. 22-
நீலகிரி மாவட்டத்தில் இனி கட்டடத் தடைச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று நடுவண் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.இராசா (A.RAJA) தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வந்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொகுதி மக்களவை உறுப்பினரும், நடுவண் தொலைத் தொடர்புத்துறை அமைச்சருமான ஆ.இராசா (A.RAJA) சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி - உதகை சாலை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. வரும் திங்கட்கிழமை முதல் கோத்தகிரி - உதகை சாலையில் இலகுரக ஊர்திகள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும். அதே போல குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் இன்னும் 20 நாட்களுக்குள் தற்காலிக பணிகள் முடிக்கப்பட்டு இதே போன்ற இலகுரக ஊர்திகள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று கூறினார்.

தற்போது மாவட்டத்தில் 3053 வீடுகள் பகுதி அளவிலும், 2600 வீடுகள் முழுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு கேத்தி பகுதியிலுள்ள தொடக்க நலவாழ்வு நடுவம் அருகில் 50 வீடுகளும், உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை அருகே 50 வீடுகளும் உடனடியாக கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் 20 நாட்களுக்குள் நிறைவு பெற்று பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்துவோம். மீதம் உள்ளவர்களுக்கு இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் இனி கட்டடங்கள் கட்டும் போது கட்டடத் தடைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும், கட்டடம் கட்டுபவர்கள் புவியியல் துறையின் வல்லுநர்களின் அனுமதி பெற்ற பிறகே கட்டடம் கட்ட அனுமதிக்கப்படுவர் என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

இந்த ஆய்வின் போது கதர்வாரியத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்தரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் ஆனந்த ராவ் பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more...

Saturday, November 14, 2009

நீலகரி மாவட்டத்தின் சேத மதிப்பு ரூ.300 கோடி : அமைச்சர் ஆ.இராசா சேதி


நீலகிரி:

கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நீலகரி மாவட்டத்தின் சேத மதிப்பு 300 கோடி ரூபாய் என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே வெள்ளத்தால் மண் சரிவு ஏற்பட்டு, வீடுகள் இடிந்து மக்கள் இறந்துள்ளனர். நீலகிரி மக்களவை உறுப்பினரும் நடுவண் அமைச்சருமான ஆ.இராசா, மாநில கதர் துறை அமைச்சர் க.இராமச்சந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது குரித்து நீலகிரியில் அமைச்சர் ஆ.இராசா, செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில், “கடுமையான மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.300 கோடி அளவுக்கு சேதமடைந்துள்ளது. மேட்டுப்பாளையம் - கோத்தகிரி - உதகமண்டலம் சாலையில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 8 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள வாகனங்கள் இந்த சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது’’ என்று கூறினார்.

அனைத்து சாலைகளையும் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை சீரமைப்பிற்கு மத்திய அரசின் உதவி கோரப்பட்டுள்ளது என்றும்
16ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்லலாம் என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

Read more...

நீலகிரி மழை பாதிப்பு - நிவாரண பணி தீவிரம்


நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்கள் பெய்த பலத்த மழையால் அழகான நகரங்கள் அலங்கோலமாயின. நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம், சாலைகள் துண்டிப்பு என்று நகரங்கள் தனித்தீவுகளாக காட்சி அளிக்கின்றன.

இந்த இயற்கை சீற்றத்துக்கு 43 பேர் பலியாகி உள்ளனர். வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டன.ஆயிரக்கணக்கானோர் இருக்க இடம் இன்றி தவிக்கிறார்கள்.அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதையொட்டி ஊட்டி தமிழக மாளிகையில் நேற்று காலை மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ஆ.இராசா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் சாமிநாதன், கதர்வாரிய துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆனந்த்பாட்டில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் இராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா, ஊட்டி வடக்கு கோட்ட வன அதிகாரி சவுந்திரபாண்டியன், தெற்கு கோட்ட வன அதிகாரி சேவாசிங், மாவட்ட வருவாய் அதிகாரி குப்புசாமி, குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சவுந்திர பாண்டியன், முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக் உள்பட மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் ஆ.இராசா செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:

’’கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வீடுகள் இடிந்து மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் தற்போது கணக்கெடுப்பின் படி 816 வீடுகள் மழையால் நாசமாகி உள்ளது. இதில் 360 வீடுகள் முழுமையாக இடிந்து உள்ளது. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வீடுகளை இழந்தவர்கள் 1,100 பேர் ஊட்டி, குன்னூர் உள்பட பல இடங்களில் உள்ள 10 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு உணவு மற்றும் கம்பளி, போர்வை போன்ற பொருட்கள் வழங் கப்பட்டு உள்ளன.

மாவட்டம் முழுவதும் 600 ஹெக்டர் நிலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்றவை பாலக்காட்டில் இருந்து நீலம்பூர், கூடலூர் வழியாக ஊட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

பெட்ரோல் பங்க்களுக்கு கொண்டு வரப்பட்டு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறது. உடனடியாக மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்யப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

குன்னூர் அருகே குரும்பர்பாடியில் இருந்த தனியார் தங்கும் விடுதியில் பணிபுரிந்த பாதுகாப்பாளர் ஒருவரை மட்டும் காணவில்லை என்று புகார் செய்யப்பட்டு உள்ளது. வருகிற 16-ஆம் தேதி முதல் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்படுவார்கள்’’
இவ்வாறு அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

Read more...

Thursday, November 05, 2009

ஊரகப் பகுதிகளில் 100 பேரில் 40 பேருக்கு தொலைத் தொடர்பு சேவை : அமைச்சர் ஆ. இராசா தகவல்

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா புது தில்லியில் தொலைத் தொடர்பு 2009 என்ற கண்காட்சிக்கு முன்னோட்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
......................................................................................................................................................................

புது தில்லி:

ஐந்தாண்டுகளில் ஊரகப் பகுதிகளில் 100 பேரில் 40 பேருக்கு தொலைத் தொடர்பு சேவைகள் என்ற 40 சதவிகித ஊரக தொலை அடர்த்திநிலை எட்டப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா கூறியுள்ளார்.

புது தில்லியில் இந்திய தொலைத் தொடர்பு 2009 என்ற கண்காட்சிக்கு முன்னோட்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ. இராசா பேசியதாவது :

உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தொலைத் தொடர்பு என்ற கருத்து சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொலை தூரத்தில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் தொலைத் தொடர்பு சேவைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசரத் தேவையை இந்த கருத்தரங்கு எடுத்துரைக்கிறது.

இந்திய தொலை தொடர்புத் துறையின் வளர்ச்சி தடையின்றி வளர்ந்து வருகிறது. சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு 2010-ஆம் ஆண்டு வாக்கில் 50 கோடி இணைப்புகளை எட்ட திட்டமிடப்பட்டது. அரசாங்கத்தின் சாதகமான கொள்கைகளால் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திலேயே 50 கோடி இணைப்புகளையும் தாண்டிவிட்டோம். அத்துடன் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு அடர்த்தியும் 44 சதவிகிதத்தை அடைந்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்கு முன்பாகவே இந்த வளர்ச்சியை அரசாங்கத்துடன் கைகோர்த்து எட்டிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை நான் பாராட்டுகிறேன்.

அரசு மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தொடர் முயற்சிகளின் காரணமாக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலிருந்த ஏற்றத் தாழ்வு விகிதம் குறுகிய காலத்திலேயே 1:10 என்ற விகிதத்தில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் குறைந்துள்ளது. அத்துடன் ஊரகப் பகுதிகளில் தொலைத் தொடர்பு அடர்த்தி விகிதமும் 4.5 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையும் ஊரகப் பகுதிகளில் தொலைத் தொடர்பை ஏற்படுத்துவதில் பங்களித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுடைய தொடர் பங்கேற்பு 2014-ஆம் ஆண்டுக்குள் ஊரக தொலைத் தொடர்பு அடர்த்தியை 40 சதவிகிதமாக எட்ட வேண்டும் என்ற அரசின் இலக்கை அடைய உதவும்.
குறைந்த விலையில் சாதாரண மக்களுக்கும் உலகத் தரத்திலான தொலைத் தொடர்பு வசதிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவது நம்முடைய தொலைத் தொடர்பு கொள்கையாகும். அந்த வகையில் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் பேசுவதற்கு ஒரு நிமிடத்திற்கு 50 பைசா கட்டணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு புதிய செல்போன் நிறுவனங்கள் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை நடைமுறைப்படுத்தப்படும் போது கடும் போட்டி காரணமாக தற்போதைய ஒரு நிமிட கட்டணத் திட்டம் மேலும் கணிசமாக குறையும்.

இந்தியாவானது நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து அறிவு நாடாக கருதப்படுகிறது. இன்டர்நெட் மற்றும் அகண்ட அலைவரிசை ஆகியவை காரணமாக அறிவுத் துறையில் தற்போது ஒட்டுமொத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அகண்ட அலைவரிசையைப் பரப்புகின்ற முயற்சியாக 2010-ஆம் ஆண்டுக்குள் இரண்டு கோடி இணைப்புகள் என்ற நம்முடைய இலக்கில் இதுவரை 70 லட்சம் இணைப்புகள் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது.
தற்போது 3ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூ சேவைகளை ஏலம் விடும் நிலையை எட்டியுள்ளோம். ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும் நடைமுறை தொடங்கப்பட்டு 2010-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செல்போன்களில் சாதாரண மனிதனும் அதிக வேகத்தில் தகவல்களை படியிறக்கம் செய்தல், பிராண்ட் பேண்ட் இணைப்பு பெறுதல், ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு இந்த 3ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூஏ சேவைகள் உதவும்.
தற்போது ஊரகப் பகுதிகளில் அகண்ட அலைவரிசை நெட்வொர்க்கை அமைப்பதில் உள்ள சிக்கல்கள், தனிநபர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வாடிக்கையாளர் வளாக சாதனத்தின் அதிக விலை, வழிக்கான உரிமைத் தொடர்பான பிரச்சனைகள், மோசமான மின்சப்ளை ஆகியவற்றில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணவும் இந்த 3ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூஏ சேவைகள் உதவும்.

பொது மற்றும் தனியார் பங்களிப்பில் இரண்டாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஏழு தொலைத் தொடர்பு சீர்மிகு மையங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை நன்றாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய தொலைத் தொடர்புத் துறையின் கண்காண்காட்சியானது இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் முக்கிய தொலைத் தொடர்பு நிகழ்ச்சியாகியுள்ளது. இதில் பங்கேற்பாளர்கள் மற்றும் மாநாடுகள் என்ற அம்சங்களின் அடிப்படையில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக அறிய வருகிறேன். இந்திய சந்தையின் ஆற்றல்கள் மற்றும் இந்திய செல்போன் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ஆ. இராசா பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட், தொலைத் தொடர்புத் துறை செயலாளர் பி. ஜே. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more...

தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் பொது சேவை மையங்கள் நிறுவப்படும் : அமைச்சர் ஆ. இராசா தகவல்


புது தில்லியில் 27.10.2009 தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களின் மாநாட்டை துவக்கி வைத்து மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா உரையாற்றினார்.

............................................................................................................................................................
புது தில்லி:

தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் பொது சேவை மையங்கள் நிறுவ மேலும் கூடுதலாக 1.50 இலட்சம் பொது சேவை மையங்கள் அமைக்க தகவல் தொழில்நுட்பத் துறை திட்டம் தயாரித்திருப்பதாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் ஆ. இராசா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :

இந்தப் பொது சேவை மையங்கள் பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் சேவைகளை அளிக்கும். அத்துடன் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம் முதலிய முக்கியத் திட்டங்களுக்கும் இம்மையங்கள் ஒத்துழைப்பு நல்கும்.

வர்த்தக விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் வர்த்தக நிறுவனங்கள் ரிட்டர்ன்களை பதிவு செய்தல், தாக்கல் செய்தல் தொடர்பான சேவைகள், வருமான வரி ரிட்டர்ன்கள் மற்றும் வருமான வரித் துறையின் திரும்ப வழங்குதல்கள், 28 தேசிய வங்கிகள் மூலமாக நேரடி மற்றும் மறைமுக வரிகளை ஆன்லைனில் செலுத்துதல், ஓய்வூதியதாரர்களின் இணையதளம் மூலமாக ஓய்வூதியதாரர்களுக்கு ஆன்லைன் சேவைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொது சேவைகள் தற்போது ஆன்லைனில் உள்ளன. இந்த தேசிய சேவைகளுடன் சேர்த்து கணினிமயமாக்கப்பட்ட உரிமைகள் பதிவேட்டை வழங்குவதற்கு நிலப் பதிவேடுகளையும் சொத்துக்கள் பதிவு செய்தலையும் மற்றும் பேப்பர் அடிப்படையிலான ஓட்டுனர் உரிமங்களை ஸ்மார்ட் கார்டுகளாகவும் பல்வேறு மாநிலங்கள் கணினிமயமாக்கியுள்ளன. இந்த நடவடிக்கைகள் சாதாரண மனிதனுக்கு அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு கணிசமான அளவில் நிவாரணம் கொண்டு வந்துள்ளது.

இந்த பொது சேவை மையங்களை நிறுவுதல் மற்றும் இணைப்பு கொடுப்பதில் உள்ள சிக்கலை தீர்த்தல் ஆகியவற்றில் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு சாதாரண மனிதனுக்கு அதிகாரம் வழங்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் தொழில்நுட்ப பயன்பாடு கிடைக்கும் வகையில் மத்திய அரசானது பாரத் செயல்பாட்டு முறை தீர்வுகள் (பிஓஎஸ்எஸ்) என்று பெயரிடப்பட்ட இந்திய தேவைகள் மற்றும் இந்திய மொழி உதவியோடு கூடிய ஜிஎன்யூ-லைனக்ஸ் உள்ளூர் டெஸ்க்டாப் விநியோகத்தை கொண்டு வந்துள்ளது. இது மின் ஆளுமை மற்றும் ஆன்லைன் கல்வியின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அரசும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவையுள்ளது. இந்த முயற்சியில் விரைவான அமலாக்கத்தை உறுதி செய்ய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். பொதுச் சேவைகளை வழங்குவதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக தேவையான சட்ட வழிமுறைகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. 2008-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டமானது மின்னாளுமையை விரைவாகவும் சிறப்பாகவும் செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் பொது மற்றும் தனியார் பங்களிப்பை சிறந்த முறையில் உறுதி செய்கிறது. இதன் பயனாக மின்னாளுமைத் திட்டங்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவது பலமடங்கு அதிகரித்துள்ளது. எம்சிஏ 21, பாஸ்போர்ட் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவை பொது சேவைகளை வழங்குவதில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்புக்கு சிறந்த உதாரணங்களாகும். இவ்வாறு அமைச்சர் ஆ.இராசா பேசினார்.

Read more...

Wednesday, October 28, 2009

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முந்தைய முறையை நானும் செய்தேன் - பதவி விலகல் பேச்சு எழ வாய்ப்பே இல்லை : அமைச்சர் ஆ.இராசா விளக்கம்


புது தில்லி, அக்.28-
எனக்கு முந்தைய அமைச்சர்கள் எல்லோரும் பின்பற்றிய நடைமுறைகளைத்தான் நானும் செய்தேன். சட்ட விதிகள் மீறல் எதுவும் இல்லை. எனவே, இதில் பதவி விலகல் பேச்சு எழ வாய்ப்பே இல்லை என்று நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா கூறியுள்ளார்.

நடுவண் அரசின் சோலிசிட்டர் ஜெனரல் தெளிவான ஒப்புதல் வழங்கிய பிறகு, பிரதமருடன் கலந்தாய்வு நடத்தி, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்பதான் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நான் கூறி வருகிறேன். எனவே எவ்வித தெளிவின்மைக்கோ, விதி மீறல்களுக்கோ இடமில்லை. பா.ச.க. தலைமையிலான ஆட்சியினால் 1999-இல் கொண்டுவரப்பட்ட தொலைத் தொடர்புக் கொள்கையில் கூறப்பட்டுள்ள, முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற நன்கு நிலைநாட்டப்பட்ட கொள்கை நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது என்று என்று அமைச்சர் இராசா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இதே நடைமுறையைத்தான் எனக்கு முந்தைய அமைச்சர்கள் எல்லோரும் பின்பற்றி இருக்கிறார்கள். நானும் அதைத்தான் செய்தேன். எனவே பின்பற்றப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நடைமுறையைப் பொறுத்தவரையில் மீறல் எதுவும் இல்லை என்று ஆ.இராசா கூறினார்.

கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் நீங்கள் பழிவாங்கப்படுகிறீர்களா என்ற வினாவுக்கு, “அதிக நிறுவனங்கள் இருக்கக் கூடாது என்று முதலில் கருதப்பட்டது. அதனால் தேக்கநிலையும், ஒருவகையான தொழில்நிறுவனக் கூட்டணிகளும் இருந்தன. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) நெறிமுறைகளுக்கு ஏற்ப போட்டியைக் கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே அந்தப் போட்டி சில கொந்தளிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம். அது விசாரிக்கப்பட வேண்டும்” என்று இராசா விடை அளித்தார்
.
அவரது அமைச்சகத்தைத் தொடர்புபடுத்தி விசாரணைகள் நடந்து வரும் நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பற்றி கேட்டதற்கு, “பதவி விலகல் என்ற கேள்விக்கு எங்கே இடம் இருக்கிறது? அந்தக் கேள்வியே எழவில்லை. தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் ஏதும் நடைமுறைத் தவறுகள் செய்திருக்கிறார்களா என்பது புலனாய்வு அமைப்பின் முன்னால் இருக்கிறது. புலனாய்வு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நான் அதில் தலையிடவோ, விமர்சனம் செய்யவோ மாட்டேன் என்று அமைச்சர் ஆ.இராசா குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Tuesday, October 27, 2009

அமைச்சர் ஆ.இராசாவுடன் தென் கொரிய குழு சந்திப்பு


மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசாவை புது தில்லியில் தென் கொரிய குடியரசின் அதிபருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய அமைப்பான எதிர்காலம் மற்றும் தொலைநோக்கு குறித்த அதிபர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் வாக் செங்-ஜன் சந்தித்துப் பேசினார்.
.........................................................................................................


புது தில்லி,
தகவல் தொழில்நுட்பத் துறையில் கூட்டுறவுக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக டாக்டர் வாக் செங்-ஜன் தலைமையிலான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட தென் கொரிய குழுவினர் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசாவை புது தில்லியில் சந்தித்துப் பேசினார்கள்.

தென் கொரிய குடியரசின் அதிபருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய அமைப்பான எதிர்காலம் மற்றும் தொலைநோக்கு குறித்த அதிபர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் வாக் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னணு ஆளுமை, சைபர் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டுறவுக்காக இந்தியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே 2001-ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2006-வுடன் முடிவடைந்து விட்டது. தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் உள்ள ஆற்றல்களை பயன்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க இருநாடுகளும் விரும்புகின்றன. அதற்கு ஏற்ற வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Read more...

எம்டிஎன்எல் நிறுவனம் ரூ.35.43 கோடி பங்கு ஈவுத் தொகை, மத்திய அமைச்சர் இராசாவிடம் வழங்கியது

புது தில்லி,

போட்டி சூழல் இருந்த போதிலும் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் எம்டிஎன்எல் நிறுவனம் முந்தி நிற்க வேண்டும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா தெரிவித்துள்ளார். எம்டிஎன்எல் நிறுவனம் தனது சமூக கடமைகளை ஆற்றுவதற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

புது தில்லியில் எம்டிஎன்எல் வழங்கிய ரூ.35,43,72,740 தொகை பங்கு ஈவுத் தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். 25.09.2009 அன்று நடைபெற்ற எம்டிஎன்எல் நிறுவனத்தின் 23-வது ஆண்டு பேரவைக் கூட்டத்தில் ரூ.63 கோடி ஈவுத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ரூ.63 கோடியில் ரூ.35.43 கோடி இந்திய அரசுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கு ஈவுத் தொகைக்கான காசோலையை வழங்கிய எம்டிஎன்எல் தலைவர் ஆர் எஸ் பி சின்கா, கடந்த ஆண்டு எம்டிஎன்எல் நிறுவனம் 40 சதவிகிதம் ஈவுத் தொகை அளித்தாகவும் தற்போது சம்பள உயர்வு போன்றவற்றால் செலவுகள் உயர்ந்ததால் பங்கு ஈவுத் தொகையை குறைத்து கொள்ள நேரிட்டதாகவும் தெரிவித்தார்.

Read more...

Sunday, October 25, 2009

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை: ஆ. இராசா அறிவிப்பு


உதகமண்டலம், அக். 25-

இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும், இதற்காக பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உதகமண்டலத்தில் 24.10.2009 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும் விசயத்தில் எனக்கு முன் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்களும், அதிகாரிகளும் வகுத்து வைத்துள்ள விதிமுறைகளைத்தான் நான் கடைப்பிடித்தேன். அந்த விதிமுறைகளை நான் மீறவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று தெரிவித்தார்.

தொலைத்தொடர்பு அலுவலகங்களில் நடுவண் புலனாய்வுப்பிரிவினர் ஆய்வு நடத்தியதையடுத்து, நீங்கள் பதவி விலகுவீர்களா? என்று கேட்டபோது, “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டதாக நடுவண் புலனாய்வுப் பிரிவோ அல்லது வேறு ஏதேனும் அமைப்புகளோ அறிவிக்கவில்லை. எனவே, நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை” என்று ஆ. இராசா திட்டவட்டமாகக் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழக்குப் பொறுப்பேற்று நீங்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றனவே என்று கேட்டபோது, “எதிர்க்கட்சிகளிடமிருந்து இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும். தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் ஆற்றிய பணிகளை எதிர்க்கட்சிகள் பாராட்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என்று இராசா எதிர்வினா எழுப்பினார்.

Read more...

25 பைசாவில் போன் பேச வசதி : அமைச்சர் ஆ.இராசா தகவல்

அஞ்சல் அலுவலகங்களில் ‘உடனடி பன்னாட்டு பணப்பரிமாற்ற சேவை’ தொடக்க விழா 24.10.2009 அன்று கோவையில் நடந்தது. மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா புதிய சேவையை தொடக்கி வைத்தார். கோவை மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., கந்தசாமி, மாநகராட்சி மண்டல தலைவர் பைந்தமிழ்பாரி, செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
............................................................................................................................................................

கோவை:
‘‘இந்தியா முழுவதும் தொலைபேசியில் 25 பைசாவில் பேசும் வசதி அடுத்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும்,’’ என மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில், ‘உடனடி பன்னாட்டு பணிப்பரிமாற்ற சேவை’, அயல்நாட்டிற்கு பொருட்கள் அனுப்புவதற்கான ‘ஓர்முக கட்டண பெட்டி’ அறிமுக விழா கோவையில் 24.10.2009 அன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:
”5 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் நவீன தோற்றத்துடன் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பணியாற்றுவோர், வெளிநாட்டில் கல்வி கற்போர் உடனுக்குடன் பணப்பரிமாற்றம் செய்யலாம். உலகின் எந்த இடத்தில் இருந்து பணம் அனுப்பினாலும் ஒரு நிமிடத்தில் கிடைத்துவிடும். வெளிநாட்டுக்கு பொருட்கள் அனுப்ப ‘ஓர்முக கட்டண பெட்டிகள்’ ரூ.1000, ரூ.1500, ரூ.2500ல் கிடைக்கும். இதில் பொருட்களை வைத்து அனுப்பலாம். முதல்கட்டமாக கோவை, ஊட்டி அஞ்சல் நிலையங்களில் இவ்வசதி கிடைக்கும்’’ என்று கூறினார்.

“100 கோடி மக்கள் தொகையில் 42 கோடி பேர் தொலை பேசி இணைப்பு பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் 40 சதவீதம் பேருக்கு தொலைபேசி வசதியை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொலைபேசியில் 25 பைசாவில் பேசும் வசதி அடுத்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

Read more...

Thursday, October 22, 2009

பா.ம.க. கூடாரம் காலி! : அமைச்சர் ஆ.இராசா முன்னிலையில் இணைந்தனர்

பெரம்பலூர், அக்.22-

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் 3000 பேர் அக்கட்சியில் இருந்து விலகி மத்திய அமைச்சர் ஆ.இராசா முன்னிலையில் தி.மு.கழகத்தில் இணைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் கை.கி.செழியன் தலைமையில் பரவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கமலக்கண்னன், வடக்கலூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருவள்ளுவன், ஓகளூர் ஊராட்சிமன்றத் தலைவர் பூங்கோதை இராமலிங்கம், நன்னை ஊராட்சிமன்றத் தலைவர் அமிர்த கணேசன், கீழபெரம்பலூர் ஊராட்சிமன்றத் தலைவர் கொளஞ்சி, வேப்பூர் ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், செந்துறை ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் நல்லவடமலை, பாமக மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், பாமக செந்துறை ஒன்றிய கிளைச் செயலாளர் கொளஞ்சி, பாமக செந்துறை ஒன்றிய செயலாளர் படையப்பா, வேள்விமங்களம் இரவிக்குமார் உட்பட 3000 பேர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

க.ஆடுதுறை கிராமத்தில் உள்ள ஏ.கே.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, தி.மு.க.வில் இணைந்த அனைவருக்கும் அமைச்சர் ஆ.இராசா பொன்னாடை போர்த்தி வரவேற்றுப் பேசினார்.

அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:
அனைத்து சாதியினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் தலைவர் கலைஞர். இன்றைய தினம் பா.ம.க.விலிருந்து 3000 பேர் வந்து தி.மு.க.வில் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இங்கே ஊராட்சிமன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் போன்ற பொதுமக்களுக்கு பணியாற்றுபவர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்ற நிதிவசதியை தலைவரிடமும் தளபதியிடமும் கேட்டு பெற்றுத் தருவேன். கலைஞர் ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் நீங்கள் எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் இராஜ்குமார், சிவசங்கர், மாவட்டக் கழகத் துணை செயலாளர் துரைசாமி, மாவட்டத் துணை செயலாளர் வெங்கடாசலம், ஒன்றியச் செயலாளர் குன்னம் இராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Read more...

Wednesday, October 21, 2009

தமிழகத்தில் தான் அதிகளவு மக்கள் நலத்திட்டங்கள் : அமைச்சர் ஆ.இராசா பெருமிதம்


அரியலூர் மாவட்டம் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டம் 2009-10 ஆம் ஆண்டுக்கான கையேட்டை மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா வெளியிட மாவட்ட ஆட்சியர் ஆபிரகாம் பெற்று கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நஜ்மல் ஹோடா, ஆண்டிமடம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
..........................................................................................................................................................

வேப்பந்தட்டை
, அக். 22-

இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் அதிகளவில மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா பெருமிதத்துடன் கூறினார்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தில் தமிழக அரசின் இலவச டிவி வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் இராஜ்குமார், சிவசங்கர், மாவட்ட ஊராட்சித்தலைவர் கொடியரசி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் 720 பயனாளிகளுக்கு இலவச தொலைக்காட்சிகளை வழங்கி மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 75 ஆயிரம் இலவச வண்ண தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஆயிரம் தொலைக்காட்சிகள் விரைவில் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் அதிகளவில மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரூ.ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி, சத்துணவில் வாரம் மூன்று முட்டை, ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி, ஏழை பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் கூறினார்.

தமிழக அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து மத்திய அரசும் ரூ.60 ஆயிரம் கோடியை விவசாய கடன் தள்ளுபடி செய்தது. தமிழக மக்கள் நோய், நொடியின்றி வாழ்வதற்காக, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஏழை, எளிய மக்களும் ரூ.1 லட்சம் வரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்று பயனடையலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில், காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா, கோட்டாட்சியர் உதயகுமார், வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேறொரு விழா,

ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை குத்து விளக்கேற்றி மத்திய அமைச்சர் ஆ.ராசா திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆபிரகாம், சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கர், மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம், ஊராட்சித்தலைவர் மல்லிகா ராமசாமி ஆகியோர் கலந்துகொடனர்..

Read more...

Saturday, October 10, 2009

ஜெனிவாவில் அமைச்சர் ஆ.இராசா - ஹாமாடோன் ஐ டொரி சந்திப்பு


மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தின் செயல் இயக்குனர் டாக்டர் ஹாமாடோன் ஐ டொரியை ஜெனிவாவில் 07.10.2009 அன்று சந்தித்து பேசினார்.

Read more...

Thursday, October 01, 2009

கலைஞருக்கு அண்ணா விருது வழங்கியது தகுமா? : அமைச்சர் ஆ.இராசா விளக்கம்

அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தி.மு.க. அறக்கட்டளை சார்பில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது. கலைஞர் அண்ணா விருது பெற காரணமாக இருப்பது எது? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

முதலமைச்சர் கலைஞர், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி முன்னிலையிலும் கவிஞர் வாலி தலைமையிலும் நடந்த இக்கருத்தரங்கில், சுப.வீரபாண்டியன், நடுவண் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஜெகத்ரட்சகன், நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, முன்னாள் அமைச்சர் தென்னவன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இந்தக் கருத்தரங்கில் ”கலைஞர், அண்ணா விருது பெற காரணமாக இருப்பது பகுத்தறிவுக் கொள்கையே” என்று வாதிட்ட அமைச்சர் ஆ.இராசாவின் உரை அடங்கிய காணொலியை வெளியிடுகிறோம்.


Read more...

Saturday, September 26, 2009

சமஸ்கிருதம் படித்தால்தான் எம்.பி.பி.எஸ். அட்மிஷன் சட்டத்தை எதிர்த்தவர் அண்ணா : ஆ.இராசா பேச்சு


இந்துத்துவாவின் குணாம்சத்தில் ஒன்று: Prohibition of power - அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பது.

1930இல், 40 இல் நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியாது. பல மாணவர்களுக்குத் தெரியாது. இன்றைக்கு இருக்கிற அரசியலில் மாணவர்கள் எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறார்கள். திருவிழாவிலே குழந்தைகளை ஒரு நிமிடம் இடுப்பிலேயிருந்து தாய்மார்கள் கழட்டிவிட்டால் கிலுகிலுப்பைக்காரன் பக்கத்திலே ஓடிப்போகிற குழந்தையைப் போல் இன்றைக்கு இருக்கிற இளைஞர்கள் எங்கெங்கோ அரசியல் கட்சிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன் 1931 வரை இந்த மண்ணில் சமஸ்கிருதம் படித்தால் மட்டும்தான் எம்.பி.பி.எஸ் - இல் அட்மிஷன். பார்ப்பதற்குப் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். அண்ணா எழுதுகிறார்.

அண்ணா நேரடியாகச் சொன்னால் எடுக்காது என்று சொல்லி வேறுவிதமாக எழுதுகிறார்:
ரோமனசோ என்று ஒருவன் இருந்தான் ரஷ்யாவில், அவனுக்குத் தாய்மொழி இலத்தீன். ஆனால் இலத்தீன் படித்த அவனுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டது. அதனால் அவன் இலக்கியத்திலே பின்னால் பெரிய ஆளாகி பெரிய நோபல் பரிசு பெற்றான். ஆனால் அவன் அப்போது வருந்தினான், எனக்கு இரஷ்ய மொழி தெரியவில்லை என்பதற்காக எம்.பி.பி.எஸ் சீட்
கொடுக்கவில்லையே என்று. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், ஒரு மொழி தெரியவில்லையே என்பதற்காக அந்த மண்ணிலே வாழுகிறவனுக்கு எம்.பி.பி.எஸ்ஸிலே சீட் இல்லையா என்று கேட்கிறாய் தம்பி, இங்கு மட்டும் என்ன வாழ்ந்தது? 1931 வரை எந்த ஜாதிக்காரனாக இருந்தாலும் சமஸ்கிருதம் தெரிந்தவனுக்கு மட்டும்தான் எம்.பி.பி.எஸ்ஸில் இடம் என்கின்ற சட்டத்தை உருவாக்கிய நாடு இந்த நாடு. எத்தனை மாணவர்களுக்குத் தெரியும்?

ஆக இது தெரியாமல் போன காரணத்தினால்தான் இன்றைக்கு நிழலிலே இருக்கின்றோம் என்கிற காரணத்தினால்தான் வெயிலின் வெப்பம் அறியாமல் நடந்து வந்த தலைவர்களையெல்லாம் நாம் மறந்துபோகின்ற அவலத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம். ஆகவே இது மூன்றாவது இடம்.
Prohibition of power -அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.
மூன்று Ban on property - சொத்து வாங்கக்கூடாது என்பது இந்துயிசத்தினுடைய தத்துவம். நான்கு, பெண்களை சிறுமைப்படுத்துவது, பெண்களை அடக்கி வைப்பது. Suppression of women – மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. அம்பேத்கர் மீது. பெரியார் பேசிய அளவிற்கு, பெரியார் போராடிய அளவிற்கு அம்பேத்கரை ஒரு பெண்ணுரிமைப் போராளியாக அடையாளப்படுத்த
முடியவில்லை என்று சொல்லுகிறார்கள்.

அம்பேத்கர் அதற்காகத் தனியாகக் குரல் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவருடைய குரல் வேறு விதமாக இருக்கிறது.

(தொடரும்...) அடுத்து,
பெரியார் - அம்பேத்கர் : வெள்ளையருக்கு வால்பிடித்தார்களா?

Read more...

Wednesday, September 23, 2009

தேயிலைதோட்ட தொழிலாளருக்கும் நல திட்ட உதவிகள் : அமைச்சர் ஆ.இராசா பெருமிதம்


குன்னூர்:

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பயன் பெறும் வகையிலான பல்வேறு நல திட்ட உதவி களை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

நீலகிரி பொது தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினராக உள்ளவர்கள் அமைப்பு சாரா நல வாரியத்தில் இணைக்கப்பட்டதை தொடர்ந்து இதற்கான உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் இரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

இந்த விழாவில், மத்திய அமைச்சர் ஆ.இராசா சிறப்பு விருந்தினராக பங்கேற்று நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசுகையில், “தமிழக அரசு பல்வேறு நல திட்ட உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்து வருகிறது. கூலி தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு சார்பில் அமைப்பு சாரா நல வாரியம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே ஏழை, எளிய மக்களின் மீது அக்கறை கொண்ட அரசு கலைஞர் அரசு தான். கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் 51 நோய்களுக்கான சிகிச்சை அளிக்க ரூ.1 இலட்சம் நிதி வழங்கும் வகையில் உயிர் காக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தான் உடல் ரீதியாக ஏற்படும் நோய் குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிய வந்துள்ளது” என்று கூறினார்.

”நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் தேயிலை தொழிலை சார்ந்த தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். இவர்களுக்கு மாநில அரசின் நல திட்ட உதவிகள் கிடைக்க பெறவில்லை என்று கிடைத்த தகவலின் பேரில் தமிழக முதல்வரிடம் இதுகுறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
எனவே திருமண உதவி திட்டம், மகப்பேறு உதவி திட்டம் மட்டுமின்றி மாநில அரசின் அனைத்து நல திட்ட உதவிகளும் கிடைக்கும் வகையில் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த மாவட்ட மக்களின் நலனுக்காக என்றும் நான் பாடுபட தயாராக உள்ளேன். அனைத்து தரப்பு மக்களும் தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெற வேண்டும்” என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

Read more...

Tuesday, September 22, 2009

3-ஆவது கட்டமாக 67 அஞ்சலகங்கள் நவீனமயம் : அமைச்சர் ஆ.இராசா தகவல்

ஊட்டி-திருப்பூர் இடையேயான அஞ்சலக சரக்கு போக்குவரத்து சேவையை மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆ.இராசா, ஊட்டியில் தொடக்கி வைத்தார். மாநில கதர் வாரியத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்திர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
........................................................................................................................................................................
ஊட்டி:

புராஜக்ட் ஏரோ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மூன்றாவது கட்டமாக 67 அஞ்சலகங்கள் அதி நவீனமயமாக்கப்படும் என அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் அதி நவீன அஞ்சல் அலுவலகத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 27 அதிநவீன அஞ்சலகங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா ஊட்டியில் நடந்தது. தமிழக அஞ்சல்துறை தலைவர் சக்கரவர்த்தி வரவேற்றார். தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், ஊட்டி சட்டப்பேரவை உருப்பினர் கோபாலன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்திரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, ஊட்டி நகராட்சி தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா கலந்துகொண்டு 27 அதி நவீன அஞ்சலகங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து பேசுகையில், “புராஜக்ட் ஏரோ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 27 அஞ்சலகங்கள் அதி நவீன அஞ்சலகங்களாக மாற்றப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஊட்டி, அருவங்காடு உட்பட 9 அஞ்சலகங்கள் அதிநவீன அஞ்சலகங்களாக மாற்றப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள இரு துறைகள் சேவை செய்து வருகிறது. ஒன்று இரயில்வே துறை. மற்றொன்று அஞ்சல்துறை. இரயில்வே துறை சேவையும், லாபமும் ஈட்டி வருகிறது. ஆனால் அஞ்சல் துறை மட்டுமே லாபத்தை பார்க்காமல் சேவை செய்து வருகிறது.
இந்தியாவில் உள்ள 6 இலட்சம் கிராமங்களில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் அஞ்சலகங்கள் உள்ளன. இவை மூலம் மக்களுக்கு அஞ்சல் துறை தொடர்ந்து உணர்வு பூர்வமாக சேவை செய்து வருகிறது’’ என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ”தற்போது இந்தியாவிலுள்ள அஞ்சலகங்கள் ரூ.500 கோடி மதிப்பில் நவீன மயமாக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 50 அஞ்சலகங்கள் நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆட்சியில் 9 அஞ்சலகங்கள் தமிழகத்தில் நவீன மயமாக்கப்பட்டது. தற்போது இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் 27 அஞ்சலகங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில், 67 அஞ்சலகங்கள் நவீன மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் உண்மையான பிரச்னை என்னவென்று தமிழக முதல்வருக்கு கொண்டு செல்லப்படாமல் இருந்தது. முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை போன்றவை கிடைக்காமல் இருந்தது. தற்போது இது தமிழக முதல்வரிடம் கொண்டு செல்லப்பட்டு சட்டத்தை திருத்தி தோட்ட தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் ஊட்டி நகராட்சி துணை தலைவர் இரவிக்குமார், வேளாண் விற்பனை குழு தலைவர் இளங்கோ, தேர்தல் பணிக்குழு செயலாளர் முபாரக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

Monday, September 21, 2009

இந்துத்துவாவின் குணாம்சங்கள் என்னென்ன செய்யும்? - அமைச்சர் ஆ.இராசா பேச்சு


இந்துத்துவா என்னும் கொள்கை சொல்கிறோமே, இதனுடைய அடிப்படைக் கூறுகள் என்ன? முதல்கூறு, சமூகத்தை ஏற்றத்தாழ்வுள்ள படைப்புகளாக மாற்றுவது. Gradual graded inequality – the first character of the Hinduism, இந்துயிசத்தினுடைய தத்துவம் என்று அம்பேத்கர் நான்கு கூறுகளைச் சொல்லுகிறார். Graded inequality வேற்றுமையைக் கூட ரொம்ப புத்திசாலித்தனமாக படிப்படியாக வைப்பது. Horizontal division வேறு Vertical division வேறு அம்பேத்கர் மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்.

Horizontal division என்று சொன்னால், கிடைநிலையில் பாகுபடுத்திக்கொண்டே போவது இதிலே ஒரு கட்டையை எடுத்துவிட்டு இன்னொரு கட்டைக்குத் தாவலாம். ஆனால் ஏணிப்படியைப் போல vertical ஆக வைத்தால் ஒரு படியை விட்டு இன்னொரு படிக்குப் போகமுடியாது. இந்தியாவில் ஜாதி எப்படி இருக்கிறது என்றால் படிக்கட்டைப் போல இருக்கிறது. Vertical division - vertical ஆக இருக்கிற காரணத்தினாலேதான் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதியை தாண்டமுடியாமல் போகிறது என்கிற ஆய்வினை அம்பேத்கர் வைக்கிறார். அதைத் தந்தை பெரியாரும் ஒப்புக்கொண்டு, ஜாதியை நாம் எடுக்கவேண்டுமென்று சொன்னால் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க வேண்டுமென்று சொன்னால் மதத்தைக் காப்பாற்றுகின்ற கடவுளை ஒழித்தாக வேண்டும் என்றார். இந்த இடத்திலே நான் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

அம்பேத்கர் தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதனால் தான் பெரியாரை நான் கவனமாகச் சொன்னேன், பெரியாரை நாம் நாத்திகனாகப் பார்ப்பது என்பது வேறு, அந்த நாத்திகத்துக்குள் அவர் சொல்லுவது நான் ஒரு தாராளவாதி என்று அவர் சொல்லுவதற்குக் காரணம், கடவுளை நேரடியாக வெறுக்க வேண்டிய அவசியம், எதிர்க்க வேண்டிய அவசியம் பெரியாருக்கு வந்ததற்குக் காரணம் வேறு. பகுத்தறிவு என்பது வேறு. ஆனால் பெரியாருடைய நாத்திகத்திற்குப் பின்னால் இருக்கிற சமூகம் சார்ந்த உணர்வும், அம்பேத்கர் உயர்த்திப்பிடித்த ஆன்மீகமும் ஒரு இடத்தில் சந்திக்கிறது. ஜாதி கூடாது, இறப்புக்குப் பிறகு ஒன்றும் கிடையாது.

புத்தரிடத்திலே கேட்டார்கள், இறப்புக்கு, சாவிற்குப் பிறகு மனிதன் எங்கே போகிறான் என்று கேட்டதற்கு அவர் சொன்னார்:

``ஒரு விளக்கு அணைந்ததற்குப் பிறகு அந்த ஒளி எங்கே போகிறது என்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன்’’. ரொம்ப எளிமையாகச் சொன்னார்.

ஒரு
காலகட்டத்தில் அம்பேத்கர் இன்னும் தெளிவாகச் சொல்லுகிறார். அவர் எழுதிய இரண்டு புத்தகங்களைக் கல்லூரி மாணவர்கள், வரலாற்று மாணவர்கள் படித்தாக வேண்டும். Who were the sudras? Why they have been called as sudras and termed as fourth varna in Indo-aryan society? சூத்திரர்கள் யார்? அவர்கள் ஏன் நான்காவது வர்ணமாக ஆக்கப்பட்டார்கள்? என்று ஒரு புத்தகம். ஆய்வுக்கட்டுரை. இன்னொரு புத்தகம். Who were the untouchables? Why they have been called as untouchables? அவர்கள் ஏன் தீண்டத்தகாதவர்களாக அழைக்கப்பட்டார்கள் என்று சொன்னபோது சொல்கிறார், தீண்டாமை ஜாதி எல்லாம் எப்போது வருகிறது என்று சொன்னால், கிறிஸ்து பிறந்ததற்குப் பின்பு 400 ஆண்டுகளில் அதற்கு முன்பு கிடையாது. பாகியான் வருகிற பொழுது அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். கி.மு.400 வது ஆண்டு பௌத்தத்திற்கும் ஏற்கனவே இருந்த ஆரிய சமூகத்திற்கும் நடந்த மோதலின் வெளிப்பாடுதான் இந்த ஜாதிகளெல்லாம் வருகிறதென்று அங்கே அவர் குறிப்பிட்டு ஒரு ஆய்வுக்கட்டுரை வைக்கிறார். அந்த ஆய்வை மறுதலிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், எங்கே நாம் நிற்கிறோம் என்று சொன்னால் , இந்த நான்கு குணங்கள் இருக்கிறதே, Graded inequality-number one வேறுபாடுகளை ஏற்படுத்தி அந்த வேறுபாடுகளைக் கட்டாயமாக ஆக்குவது. இன்னொன்று, அப்படி வேறுபாடுகளை ஏற்படுத்தியதற்குப் பின்னால் பெரும்பான்மை சமூகத்திற்குக் கல்வியை மறுப்பது. இது ஒரு குணாம்சம். இந்துத்துவாவினுடைய குணாம்சத்தில் இதுவும் ஒன்று. மூன்றாவது, Prohibition of power அவன் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பது. 1930இல், 40 இல் எல்லாம் என்ன பண்ண முடியும்?

(தொடரும்...) அடுத்து வருவது
சமஸ்கிருதம் படித்தால்தான் எம்.பி.பி.எஸ். அட்மிஷன்!

Read more...

Saturday, September 19, 2009

கல்வி, தொழில்துறைகளை வளப்படுத்த கூடுதல் முயற்சி : அமைச்சர் ஆ.இராசா பேச்சு

பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையை மத்திய அமைச்சர் ஆ.இராசா திறந்து வைத்தார். நிறுவனர் சீனிவாசன்,செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், சட்டப் பேரவை உறுப்பினர் இராஜகுமார், திமுக மாவட்டச் செயலாளர் துரைசாமி மற்றும் பலர் உடனுள்ளனர்.
.........................................................................................................................................................................
பெரம்பலூர்:

பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை திறப்புவிழா 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீல்ராஜ் வரவேற்றார்.துணைத்தலைவர் கதிரவன், இயக்குநர்கள் மணி, இராஜபூபதி, நிர்வாக அலுவலர் இராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட வருவாய் அதிகாரி பழனிச்சாமி, சட்டப்பேரவைறுப்பினர்கள் இராஜ்குமார், சிவசங்கர், சட்டப் பேரவை முன்னாள்உறுப்பினர் துரைசாமி, முன்னாள் சேர்மன் அட்சயகோபால், அரசு வழக்குரைஞர் இராஜேந்திரன், நகராட்சி துணைத் தலைவர் முகுந்தன், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன், நகர வர்த்தகர் சங்கத் தலைவர் பழனியாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மருத்துவமனையை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா திறந்து வைத்து பேசுகையில்,”பொதுவாழ்வில் செல்வம் ஈட்டுவது அவரவரர் உரிமையாகும். அவ்வாறு ஈட்டக்கூடிய செல்வம் அறத்தின் பயனாக ஈட்டும்போது பிறருக்கும் அது இன்பத்தை தரக்கூடியதாக இருக்கும். பெரம்பலூர் மாவட்டத்தில் செய்யப்பட்ட பல்வேறு பணிகளுக்கும் காரணகர்த்தா முதல்வர் கருணாநிதி தான். எனது பிறந்தவீடான பெரம்பலூர் மட்டுமின்றி தற்போது புகுந்த வீடாக உள்ள நீலகிரியிலும் மக்கள் நலனுக் காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் தொழில்துறைகளை வளப்படுத்த கூடுதல் முயற்சி எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

இந்த விழாவில் கல்லூரி முதல்வர்கள் தாயுமானவன், ஜெயராமன், அனுஷாபாஸ்கர், முத்தரசு, சுகுமார், வேல்முருகன், பாஸ்கரன், துணை முதல்வர்கள் அப்ரோஸ், முத்துமணி, நந்தக்குமார், செந்தில்குமார், டீன்கள் கண்ணன், சேகர் மற்றும் பலர் பங்கேற்றனர். மருத்துவமனை டீன் அரங்கநாதன் நன்றி கூறினார்.

Read more...

Friday, September 18, 2009

பெரியார் களஞ்சியம் - குடிஅரசு 1925 தொகுப்பு வெளியீடு : அமைச்சர் ஆ.இராசா பங்கேற்பு


தந்தை பெரியாரின் 131-ஆம் பிறந்த நாளையொட்டி 17.9.2009 அன்று சேலத்தில் நடைபெற்ற விழாவில், பெரியார் களஞ்சியம் - குடிஅரசு 1925 தொகுப்பு நூலை, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட முதல் பிரதியை மத்திய அமைச்சர் ஆ. இராசா பெற்றுக்கொண்டார்.
......................................................................................................................................................................

தந்தைபெரியாரின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, விடுதலை நாளேட்டின் 75 ஆம் ஆண்டு பவள விழா, திராவிடர் கழக மாணவரணி மாநாடு ஆகிய விழாக்கள் சேலம் கோட்டை ஸ்டேட் பேங்க் அருகில் 17.9.2009 அன்று மாலை 7.30 மணியளவில் நடைபெற்றன.

இவ்விழாவில், சென்னை முரசொலி அலுவலகத்திலிருந்தபடி வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கலந்துகொண்டு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் புதிய வெளியீடான பெரியார் களஞ்சியம் குடிஅரசு 1925 நூலினை வெளியிட்டார். வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் ரூபாய் அய்யாயிரம் கொடுத்து நூலினை பெற்றுக்கொண்டார்.

சேலத்தில், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம், நூலின் பதிப்பாசிரியரும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி நூலை வழங்கினார். பின்பு பெரியார் களஞ்சியம் குடிஅரசு முதல் தொகுதி பற்றி கி.வீரமணி அறிமுகவுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில், அமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமி, அமைச்சர் டாக்டர் க. பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ஆ.ராஜா, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன், திராவிடன் புத்தக நிலைய இயக்குநர் வீ. அன்புராஜ், ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன், பெரியார் திடல் மேலாளர் ப. சீதாராமன், வழக்கறிஞர் த. வீரசேகரன், சேலம் மாநகர தி.மு.க. செயலாளர் எஸ்.டி. கலையமுதன், சேலம் மேயர் ரேகா பிரியதர்சினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more...

Saturday, September 12, 2009

"3 ஜி சேவை” திசம்பர் 31-க்குள் செயல்படும்: அமைச்சர் ஆ.இராசா தகவல்

சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த தகவல் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் "இந்தியா 2009- 10: அலைவரிசையின் வளர்ச்சிப் பாதை' என்ற நூலை மத்திய அமைச்சர் ஆ. இராசா வெளியிட்டார். அந்த நூலுடன் ( வலமிருந்து) அமைச்சர் பூங்கோதை, மத்திய அமைச்சர் ஆ.இராசா, கருத்தரங்கின் தலைவர் மகாலிங்கம், இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தேசியத் தொலைத் தொடர்புத் தலைவர் மனோஜ், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன்.
....................................................................................................................................................................
சென்னை:
தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சியான "3 ஜி சேவை” இந்த ஆண்டு திசம்பர் 31- ஆம் தேதிக்குள் செயல்படும் என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை அன்று தகவல் தொழில் நுட்பம் தொடர்பான " கனெக்ட் 2009' கருத்தரங்கம் தொடங்கி யது. "இந்தியா 2009-10: அலைவரிசையின் வளர்ச்சி பாதை என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டார். அத்துடன், சிறந்த தகவல் தொழில் நுட்ப மற்றுமதியாளர்களுக்கான விருதை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் உரையாற்றுகையில், ”தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் ஊலக நாடுகள் வரிசையில், இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சியான "3 ஜி சேவை” இந்த ஆண்டு திசம்பர் 31- ஆம் தேதிக்குள் செயல்படும்.

தகவல் தொடர்புத்துறை தொடர்பாக கொள்கை முடிவுகள் எடுப்பது மத்திய அரசின் கையில் உள்ளது. மாநில அரசுகளும் தகவல் தொடர்புத் துறை கொள்கை முடிவுகள் எடுக்கக்கூடிய அதிகாரம் வழங்குவது குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டு மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் இது குறித்து அரசு பரிசீலனை செய்யும்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். பங்கு விற்பனை குறித்து செய்தியாளர்கள் வினாவுக்கு ஆ.இராசா விடையளிக்கையில், "இந்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். பங்குகளைத் தனி யாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சு வார்த்தையின் முடிவில் பங்குகள் விற்பனை செய்வது தொடர்பாக அரசு முடிவெடுக்கும். பேச்சு வார்த்தை ஒரு வேளை பயனளிக்காமல் போனால் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை செய்வேன்” என்று தெரிவித்தார்.

Read more...

Thursday, September 10, 2009

பெரியாரும் அம்பேத்கரும் பொருள்முதல்வாதிகள் : அமைச்சர் ஆ.இராசா பேச்சு

ஒரு பொருள்முதல்வாதிக்கு இருக்கவேண்டிய அடிப்படையான பண்பு என்ன என்று சொன்னால், இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை இயற்கையாகவே பார்ப்பது. சிம்பிளா சொன்னா அவ்வளவுதான். மெட்டீரியலிசம்னா போட்டுக் குழப்பிகிட்டு இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மெட்டீரியலிசம்னு சொன்னா, இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை இயற்கையாகவே பார்ப்பது.

இந்த மார்க்சிய கண்ணோட்டத்தோடு சமூகத்தைப் பார்த்த இரண்டு தலைவர்கள் இந்தியாவில் உண்டு என்றால் அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும்தான். வேறு எந்த கம்யூனிஸ்ட்காரர்களும் கிடையாது.

கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மிகப்பெரிய தலைவர் எஸ்.ஏ. டாங்கேவே ”வேதத்திலிருந்து தான் கம்யூனிசம் வந்தது’’ ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. வேதத்துக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்மந்தம்? இன்றைக்கு இருக்கின்ற இந்த மேடையில் நின்று கொண்டு சொல்கின்றேன். பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் பொருத்தப்பாட்டைப் பற்றி இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கின்றோம். ஒரு கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பெரியாரையும் அம்பேத்காரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களுடைய வாழ்க்கைத் தளம், இவர்களுடைய நெறி எல்லாம் ஒரு சின்ன சிட்டிகைக்குள் அடைக்கப்படவேண்டியவை என்று கம்யூனிஸ்ட்கள் கருதினார்கள். வர்ணபேதம் பேசப்பட வேண்டியதில்லை என்று கருதினார்கள். ஆனால் அப்படிப் பேசாமல் இருப்பதற்கு அவர்கள் மார்க்சியத்தைப் படிக்காமல் போனார்கள் என்பதுதான் உண்மை.

பெரியார் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சுதந்திரப் போர் என்கின்ற தலைப்பில் இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் எழுதுகிறார்: ”பசுவையும் குரங்குகளையும் வணங்குகிற மூடத்தனம் இருக்கின்ற தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில், மனிதனை இன்னொரு மனிதன் கருவியாகக் கருதுகிற புரட்சி வருவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை” என்று சொன்னார்.

காரல் மார்க்ஸ் சொன்ன அறிவுரையை ஏற்க மறுத்த மார்க்சியவாதிகள் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கு தந்தை பெரியாரின் தடியையும், அம்பேத்கரின் கண்ணாடியையும் போட்டுக்கொண்டு அருந்ததியர்களின் மாநாட்டில் உரிமைக்காகக் கலந்து கொள்கிறார்கள் என்றால் பெரியாரும் அம்பேத்கரும் இன்னும் நூறு ஆண்டுகளுக்குத் தேவைப்படுகிறார்கள் என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் இவர்களுக்கு இருக்கிற பொருத்தப்பாடு .

பெரியாரும் அம்பேத்கரும் ஒரு தளத்தில் நின்றார்கள்
இந்துயிசம் என்று வருகிற போது இரண்டு பேரும் ஒரு தளத்தில் நின்றார்கள் . அதற்கு என்ன காரணம்? இரண்டுபேரும் ஒருவிதத்திலே நாத்திகவாதிகள். அம்பேத்கர் தன்னை ஒரு இடத்திலேகூட நாத்திகவாதி என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் இருக்கிற கட்டமைப்பை உடைக்க வேண்டுமென்று விரும்பியவர்.

இன்னொரு இடத்திலே பெரியார் சொல்லுகிறார்: ”நான் நாத்திகன் என்றுகூட சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. நான் தாராளவாதி’’ என்று சொல்லுகிறார். அதற்கு என்ன காரணமென்றால் , பெரியாருடைய நாத்திகம், இன்றைக்கும் சொல்லுகின்றேன். திராவிடர்கழகத்தின் மீது அல்லது பெரியாரின் கருப்புச் சட்டைக்காரர்கள் மீது இருக்கிற மிகப் பெரிய குற்றச்சாட்டு. பெரியார் என்றால் இவர்கள் அறிந்தது, அல்லது பெரியார் என்றால் இவர்கள் அடையாளப்படுத்த விரும்புவது கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் பெரியாரைப் பார்க்கிறார்கள். மதம் வேண்டாம், கடவுள் வேண்டாம், மோட்சம் இல்லை, நரகம் இல்லை என்று சொல்லுவதற்காக மட்டுமே பெரியார் தேவைப்படுகிறார் என்கின்ற ஒரு வறட்டுத்தனமான நாத்திகத்திற்குள் பெரியாரை அடக்குவதற்கு இன்றைக்கு இருக்கிற பெரியாரிஸ்ட்டுகள் தெரிந்தோ, தெரியாமலோ ஆளாகிறார்கள் அல்லது ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கின்ற ஒரு குற்றச்சாட்டில் இருக்கிற உண்மையை நாம் மறுதலிப்பதற்கில்லை.

அதனால்தான் பெரியார் சொல்லுகிறார்: நான் நாத்திகன் என்பதைக் காட்டிலும் ஒரு தாராளவாதி என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இப்படி அவர் சொல்லுவதற்குக் காரணம் , பெரியாரின் நாத்திகம் சமூகம் சார்ந்தது. அறிவியல் பூர்வமாக அணுகி கடவுள் இல்லை என்று சொல்கிறார்.

பெரியார் சொல்லுகிறார்: ”மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது , தொட்டால் தீட்டு, நடந்தால் தீட்டு என்று சொல்லுகின்ற ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, சண்டமாருதத்தால் தூளாக்கப்படாமலோ, சமுத்திரம் பொங்கி எழுந்து அமிழச் செய்யாமலோ இருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால் அதை எப்படி நான் நம்புவது ?’’ என்று கேட்டார். எனவே பிரச்சனை கடவுளுக்கும் பெரியாருக்கும் அல்ல. இந்த சமூகத்தின் மீது பெரியாருக்கு அக்கறை இருக்கிறது. ஜாதிப் பிரச்சனையைப் பெரியார் தொடுகிற போது கடவுள் குறுக்கே வருகிறார். ஏன் காரணம் இப்படி இருக்கிறாய் என்று கேட்ட போது, இல்லை இப்படித்தான் சாஸ்திரம் சொல்லுகிறது என்ற விளக்கம் சொல்லப்பட்டது.

அதனால் தான் அம்பேத்கர் Annihilation of Caste என்ற புத்தகத்திலே சொன்னார், ”You must take the stand that Buddha took; You must take the stand that Guru Nanak took; those leaders who not only denied the sastras and also the authorities of sastras. வேதங்களை மறுப்பது மட்டுமல்ல, வேதங்களுக்கு ஆதாரமாக இருக்கிற எல்லாவற்றையும் நீ அறுத்து விடு என்று Annihilation of Caste இல் சொல்லுவதற்குக் காரணம், இங்கேதான் அந்த மய்யப்புள்ளி இருக்கிறது.

அதனால் தான் பெரியார் சொன்னார். ”நான் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் ஜாதியை ஒழிக்க விரும்புகிற இந்தப் போரில் உன்னுடைய கடவுளை, மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்று சொன்னால், காப்பாற்றிக் கொண்டு போ.”

நம்மால முடியலைங்கறது தானே பிரச்சனை. ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று முயற்சி செய்கிற போது அந்த ஜாதி எங்கே இருக்கிறது என்றால் வர்ணாஸ்ரமத்திலே இருக்கிறது. வர்ணாஸ்ரமம் எங்கே இருக்கிறது என்று சொன்னால், வர்ணாஸ்ரமத்தைப் படைத்தது நானே என்று கண்ணன் சொல்கிறான். ஆக, Philosophy of Hinduism - இந்துயிசத்தின் தத்துவம் என்று வருகிறபோது, அம்பேத்கர் தனியாகவே இதற்கென்று ஒரு சேப்டரே எழுதுகின்றார். Philosophy of Hinduism என்று வருகிற போது தந்தை பெரியார் சொன்ன அந்தத் தத்துவத் தளத்திலேதான் அம்பேத்கர் நிற்கிறார். அம்பேத்கர் செய்த ஆய்விலேதான் தந்தை பெரியார் நிற்கிறார். இது இவர்களுக்கிடையிலே இருக்கிற ஓர்மை.

(தொடரும்...) அடுத்து.

இந்துத்துவா என்னும் கொள்கையின் அடிப்படைக் கூறுகள்?

Read more...

Monday, September 07, 2009

பிராமணியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் வித்தியாசமில்லை : ஆ.இராசா பேச்சு

தந்தை பெரியார் பிராமணீயம் என்று எடுத்துக்கொண்டிருக்கக்கூடாது, இந்துத்துவா என்றுதான் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் படித்துப் பார்த்தவரை, அய்யா எஸ்.வி.ஆர் அவர்களும் ஒப்புக்கொள்வார்கள், பிராமணியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்றுதான். ஒரு சமூகத்தைப் படைத்து அந்த சமூகம் இப்படித்தான் வாழவேண்டுமென்பது மட்டுமல்ல, அவர்களைப் படிக்காதே என்று சொன்ன சமூகம் உலகத்திலே இன்னொரு சமுதாயம் இல்லை.

இன்னும் கூட அம்பேத்கர் ஒருமுறை ஆய்வு செய்கிறார். The caste system in India is not virtually visible இந்த அரங்கத்திலே இருக்கிற யாரையாவது பார்த்து வன்னியர் யார்? ஆதிதிராவிடர் யார்? கவுண்டர் யார்? பள்ளர் யார்? என்று நிறம் பிரிக்க முடியுமா? இந்த முகத்தைப் பார்த்து யாரையாவது ஜாதி சொல்ல முடியுமா உங்களால்? வேறுபாடு இருக்கிறது என்பது வேறு. Racial difference என்று சொல்லுவார்கள். ஒரு இன வேறுபாடு என்பது முகத்திலேயே தெரியும்.

நீக்ரோக்களைப் பார்த்தால் தெரியும். நீக்ரோக்கள் எவ்வளவு அல்லல் பட்டிருக்கிறார்கள்? The world owes a duty to untouchables as it is declared to other communities in the world என்று அம்பேத்கர் ஒரு இடத்திலே சொல்லுவார். உலகத்திலே நீக்ரோவை எப்படிப் பார்த்தீர்களோ, உலகத்திலே வேறு விதமான இன ஒடுக்கல் முறையை எப்படிப் பார்த்தீர்களோ, அப்படிப்பட்ட இன ஒடுக்கல் முறைதான் இந்தியாவில் இருக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அது தெரியவில்லை நமக்கு. அவ்வளவு தான். ஒரு நீக்ரோவைப் பார்த்தால் தெரியும், வெள்ளைக்காரன் இவன், கருப்பன் இவன், இவனுக்கு கஷ்டம் இருக்கிறது என்று சொல்லலாம்.

நீக்ரோக்கள் படும் கொடுமையை பெஞ்சமின் மொலாய்சியஸ் என்கின்ற கவிஞன் ஒருமுறை சொன்னான். ஒரு கருப்புப் பெண்மணியை நீதிமன்றத்துக்கு அழைத்து வருகிறார்கள், அந்தக் கருப்பு இனப் பெண்மணி வெள்ளைக்காரப் போலீஸ்காரர்களால் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் கொடுமைப்படுத்தப்படுகிறாள். எப்படிக் கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்பதை நீதிமன்றத்திலே பெஞ்சமின் மொலாய்சியஸ் என்கின்ற சிந்தனையாளன் தன்னுடைய கருத்தை சொல்லுகிற போது நீதிமன்றக் காட்சி வாயிலாகச் சொல்லுவான். ஒரு கருப்பு இனப் பெண்ணை நீதிமன்றத்திற்கு கூட்டி வருகிறார்கள்.
நீதிபதி கேட்கிறார்: ”அம்மா, சிறையில் உன்னை யாராவது கொடுமைப் படுத்தினார்களா?”
”இல்லை, எந்தக் கொடுமையும் படுத்தவில்லை”.

“நன்றாகச் சொல் கொடுமைப்படுத்தினார்களா?”

”இல்லை. அய்யா எனக்கு எந்தக் கொடுமையும் நடக்கவில்லை. ஆனால் ஒன்று, என் அருகிலே இருக்கிறானே இந்தப் போலீஸ்காரனுடைய தடிக்கு மட்டும் விந்து பாய்ச்சுகிற ஆற்றல் இருந்தால் நான் இந்நேரம் ஒரு குழந்தைக்குத் தாய்’’.


நீதிபதிக்குப் புரியவில்லை. அப்படியானால் எவ்வளவு பெரிய கொடுமையை அந்தப் போலீஸ்காரர்கள் அந்தப் பெண்ணுக்கு செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்து அந்த இன ஒடுக்கலினுடைய அடர்த்தியை உங்களால் அறிய முடியும்.

அம்பேத்கர் சொல்லுகிறார்: இந்த ஒடுக்கலைக் காட்டிலும் எங்கள் நாட்டில் இருக்கிற ஜாதிய ஒடுக்குமுறை கொடுமையானது. ஆனால் இதைச் சொல்லாமல் பார்த்துக்கொள்கிற வேலையை பிராமணீயம் இங்கே செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான் அவங்க அக்ரிமென்ட் போட்டாங்க. எந்த இடத்திலே தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் ஓர்மை வருகிறது என்று சொன்னால், முதல்ல சுதந்திரம் வேணான்னு சொன்னது ரெண்டுபேர்தான். இன்னும் சொல்லப்போனால் 1927 இல் சைமன் கமிஷன் வருகிறது. 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை எப்படித் திருத்தலாம் என்பதற்காக சைமன் கமிஷன் வந்த போது , இங்கே இருக்கிற காங்கிரஸ்காரர்கள் சைமன் கமிஷனே வெளியேறு என்று சொல்லுகிறார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் போலித்தனமானது. இந்தியாவில் யாரும் இந்தியர்கள் அந்தக் குழுவிலே இல்லை என்று சொன்னார்கள். அது அல்ல நோக்கம். சைமன் கமிஷன் எதற்காக வந்தது என்றால், இந்தியாவில் ஜாதி என்றால் என்ன? எத்தனை ஜாதி இருக்கிறது? ஏன் இவர்கள் படிக்க வைக்கப்படாமல் இருக்கிறார்கள்? ஏன் இவர்கள் நாகரீகம் இல்லாமல் இருக்கிறார்கள்? இவர்களுக்கு யார் காரணம்? என்பதைக் கண்டறியவேண்டிய சூழ்நிலை கமிஷனுக்கு தேவைப்பட்டது.

அம்பேத்கர் இன்னொரு இடத்தில் சொல்லுகிறார்.
No intellectual class in the world has prostituted its intelligence to invent a philosophy to keep its fellowmen in perpetual state of imbalance and poverty as Brahmin community has done to India உலகத்திலே இருக்கிற எந்த முன்னேறிய ஜாதியும், மேட்டுக்குடி ஜாதியும் தான் வளரும் - சுரண்டும் உண்மைதான். ஆனால் படிக்காதே. வறுமையிலும், ஏழ்மையிலும் இரு என்பதற்காக கடவுளின் பெயரால் ஒரு தத்துவத்தைக் கண்டுபிடித்து அந்த தத்துவத்தைச் சுமத்தி ஒரு மிகப்பெரிய சமுதாயத்தை 95 பேர் இருக்கிற சமூகத்தை அறியாமையிலும், ஏழ்மையிலும், கல்வியறிவில்லாமலும் வைத்திருக்கிற ஒரு கொடுமைக்குச் சொந்தக்காரர்கள் யாரென்று சொன்னால் இந்தியாவில் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் கிடையாது. இது அம்பேத்கர் அவர்கள் சொன்னது.

இதைத் தான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்: உலகத்திலே எந்த தேசத்திலேயும் இப்படி இல்லையே, வேற்றுமைகள் இருக்கிறது. ஆனால் அந்த வேற்றுமைகளை பிறப்போடு முடிச்சுப் போடவில்லையே என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். ஆக அந்த இரண்டு பேருக்கும் இருக்கின்ற ஒற்றுமை என்ன என்று சொன்னால், இந்து மதத்தை எதிர்ப்பது. அதற்குக் காரணம் , மனிதனை மனிதனாகப் பார்ப்பது. அது ஒரு விதம்.

(தொடரும்)... அடுத்து,
அம்பேத்கரும் பெரியாரும் பொருள்முதல்வாதிகள்

Read more...

Wednesday, September 02, 2009

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட முதல் புத்தகம் : அம்பேத்கர் எழுதியது - அமைச்சர் ஆ.இராசா பேச்சு


Genesis, Mechanisism and Development of Caste in India என்ற கட்டுரையை அம்பேத்கர் எழுதுகிற போது அவருக்கு வயது 25. 25 வயதில் ஒரு இளைஞன் இப்படி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுத முடியுமா என்று இதுவரை யாருக்கும் தெரியாது. அவரால் பயன்படுத்தப்பட்ட மேற்கோள்கள் எவ்வளவு என்பதை இதுவரை ஆழம் பார்த்தவர்கள் இல்லையோ என எண்ணுகிற அளவுக்கு அம்பேத்கரினுடைய அறிவுநுட்பம் அந்த நூல்களில் வெளிப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் 1857 இல் 1856 இல் சிப்பாய்க் கலகம் நடந்த பொழுது மதவிவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று வெள்ளைக்காரர்கள் இந்தியத் தலைவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள். பன்றிக் கொழுப்பை துப்பாக்கியிலே வைத்ததாகச் சொல்லப்பட்ட பொழுது அதை இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்ள முடியாது என்று சொன்னபோது ஒரு மிகப்பெரிய இராணுவக் கலவரம் வெடித்தது. சிப்பாய்களுக்குள் கலகம் வந்த பொழுது வெள்ளைக்கார அரசாங்கம் ஒரு ஒப்புதலுக்கு வந்தது, உங்களுடைய மத விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று .

Genesis, Mechanisism and Development of Caste in India - ஜாதியினுடைய தோற்றமும் வளர்ச்சியும் அது இயங்குகிற முறையும் என்று ஒரு புத்தகத்தை அம்பேத்கர் 1916 இல் எழுது கிறார். இந்தியாவில் முதன்முதலாகத் தடைசெய்யப்பட்ட ஒரு புத்தகம் வெள்ளைக்கார அரசாங்கத்தால் உண்டு என்று சொன்னால் அதுதான் அந்தப் புத்தகம் இந்தியாவில் முதன்முதலாகத் தடைசெய்யப்பட்ட அம்பேத்கரின் புத்தகம்தான் வெள்ளைக்கார அரசாங்கத்தால் ஒரு இந்தியர் எழுதி முதன்முதலில் தடைசெய்யப்பட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தைத் தடைசெய்ய வேண்டுமென்று Privy Council என்று சொல்லப்படுகிற உச்சநீதி மன்றம் வரை சென்றனர். இன்றைக்கு உச்சநீதி மன்றம் டெல்லியிலே இருக்கிறது. ஆனால் அன்றைக்கு உச்சநீதி மன்றம் Privy Council என்று சொல்லப்பட்ட, இங்கிலாந்திலே இருந்த அந்த உச்சநீதிமன்றம் வரை சென்று அந்தப் புத்தகத்திற்குத் தடை வாங்கினார்கள் இங்கே இருக்கின்ற பிராமணர்கள். ஏனென்றால் அதிலேதான் ஜாதி எப்படித் தோன்றியது ? அது இயங்குகிற காரணத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? என்று சொன்னார். அதிலே ஒரு இடத்திலே சொல்லுவார்: Hindus are the only people in the world whose relation between man to man has been consecrated as sacred, eternal and inviolative. உலகத்திலே வேறுபாடுகள் இருக்கிறது.

பிளாட்டோ எழுதிய `குடியரசே’ Division of Labour தான். Division of Labour என்பது வேறு , Division of Labourers என்பது வேறு. தொழிலைப் பிரிப்பதென்பது வேறு, தொழிலாளர்களைப் பிரிப்பதென்பது வேறு. மேலை நாடுகளில் தொழிலைப் பிரித்தார்கள்,

நான்கூட ஒருமுறை வெளிநாட்டிற்குச் சென்றிருந்தேன். வெளிநாட்டிற்குச் சென்றிருந்து, ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையிலே நான் தங்கியிருந்த போது , திடீரென்று கதவைத் தட்டினார்கள் மாணவர்கள். மாணவர்கள் என்று தெரியாது. இளம் பிராயத்திலே இருக்கின்ற பெண்கள், ஆண்கள் எல்லாம் திடீரென்று கதவைத் தட்டினார்கள். உங்கள் அறையைச் சுத்தம் செய்யப் போகிறோம் என்று சொன்னார்கள். எனக்கு ஒரு சந்தேகம். யாரைப் பார்த்தாலும் நமது இந்தியன் புத்தி இருக்கிறதே நமக்குள் தெருக்கூட்டி என்றால் இப்படித்தான் இருப்பான், தோட்டி என்றால் இப்படித்தான் இருப்பான்., என்று நம்மையும் அறியாமல் நமது மூளைக்குள் இருக்கிற புத்தி அங்கே வெளியே வந்தது. நீங்களெல்லாம் யார்? உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்று அவர்களைப் பார்த்து நான் கேட்டேன். அவர்கள் உடுத்தியிருந்த உடை, அவர்கள் வந்த நாகரீகம், அவர்கள் பழகிய பண்பாடு இவற்றையெல்லாம் பார்த்து எவ்வளவு உங்களுக்கு சம்பளம் என்று கேட்டேன்.

முதலில் அவர்கள் கேட்ட கேள்வி, Are you Indian? நீ ஒரு இந்தியனா? என்று கேட்டார்கள், பரிகாசத்தோடு. ஏன் என்று கேட்டேன். இந்தியாவில்தான் கூட்டுவதற்கும், கழுவுவதற்கும் ஒரு ஜாதி இருக்கிறது என்று கேள்விப்பட்டோம், நாங்கள் பக்கத்திலே இருக்கிற மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள், இந்த ஓட்டலைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். ஒரு முறை பகலிலும், இரவிலும் சுத்தம் செய்து விட்டுப் போனால் எங்களுக்கு பாக்கெட் மணி இத்தனை டாலர் கிடைக்கிறது. இதைத்தான் நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம் என்று சொல்லுகின்ற மனப்பாங்கு அந்த நாட்டில் இருக்கின்றது.

எனவே அங்கு சலவைத் தொழிலாளி இருக்கிறான். ஆனால் பிறப்போடு அது முடிச்சுப்போடப்படவில்லை. அங்கே தச்சன் இருக்கிறான், ஆனால் பிறப்போடு அது முடிச்சுப் போடப்படவில்லை. அங்கே செருப்புத் தைக்கிற தொழிலாளி இருக்கிறான். ஆனால் அவன் பிறப்போடு முடிச்சுப் போடப்படவில்லை. இன்றைக்குச் செருப்புத் தைக்கிற தொழிலாளி நாளைக்குத் தன் தொழிலை மாற்றிக் கொள்ளுவார். அதனால்தான் சொன்னார், Division of Labour என்பது வேறு , Division of Labourers என்பது வேறு. அம்பேத்கர் சொல்லுவார்: Hindus are the only people in the world whose relation between man to man has been consecrated by the religion as inviolative and eternal மாற்ற முடியாது. ஒருமுறை ஒருவன் பிறந்து விட்டால் மாற்றமுடியாது. நீ இந்த ஜாதி என்று பிறந்து விட்டால் நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மாற்ற முடியாது.

அய்யா கிண்டலாகச் சொல்லுவார். இந்து யார் என்று விளம்பரம் சொல்லுகிற போது, இந்து யாரென்று அரசியல் சட்டத்திலே, நம்முடைய இந்து லாவிலே சொல்லுகிறபோது, யார் இந்து என்று சொன்னால் அய்யா சொல்லுகிறார்:

எதுன்னு கேட்டா எதுன்னு நீ சரியாச் சொல்லனுமில்ல? எது மாடு இல்லையோ, எது கோழி இல்லையோ, எது கொக்கு இல்லையோ அதெல்லாம் ஆடு ன்னு சொன்னா அவன் பைத்தியக்காரன்ல? அது மாதிரின்னு சொன்னார். அதுவரைக்கும் புரியல நமக்கு.

அய்யா சொல்றார், இந்துன்னா யாருன்னு இவன் சொல்லணுமில்ல? Those who are not Muslims, those who are not Christians, those who are not Persians, those who are not Jews, they are Hindus. யாரெல்லாம் முகம்மதியன் அல்லவோ, யாரெல்லாம் கிறிஸ்துவன் அல்லவோ, யாரெல்லாம் பார்சியன் அல்லவோ, யாரெல்லாம் அவனல்லவோ, இவனல்லவோ அவனெல்லாம் இந்து.

இதைத் தாண்டி இன்னொருவன் பிறக்கமுடியாது இந்த மண்ணில். இந்த முடிச்சை கொண்டு வந்த சேர்த்த இழிவு , பெருமை எது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அது இந்த இந்துமதத்திற்குத் தான் உண்டு.

இதைத்தான் தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒரே இடத்தில் நின்று சொன்னார்கள்.

( தொடரும்...) அடுத்து
பிராமணியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் வித்தியாசமில்லை

Read more...

Wednesday, August 26, 2009

விடுதலை ஏட்டுக்கு அஞ்சல் உறை வெளியிடுவது பகுத்தறிவுக் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரம் - அமைச்சர் ஆ.இராசா பெருமிதம்

விடுதலை ஏட்டை போர்வாளாக கொண்டு மத்திய அரசை எதிர்த்து தந்தை பெரியார் பல கடுமையான, தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். அவற்றையும் தாண்டி அதன் சாதனைக்காக பகுத்தறிவுக் கொள்கைளை அங்கீகரித்து இந்திய அரசு சிறப்பு உறையை வெளியிட்டு உள்ளது. இது நம் கருத்துகளுக்கு திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று நடுவண் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஆ.இராசா பெருமிதத்துடன் கூறினார்.

ஈரோட்டில் நடைபெற்ற விடுதலை நாளிதழின் பவள விழாவில் சிறப்பு அஞ்சல் உறையை நடுவண் அமைச்சர் ஆ. இராசா வெளியிட, தமிழ்நாடு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

அப்போது அமைச்சர் ஆ. இராசா உரையாற்றுகையில், “வரலாற்றுச் சிறப்பு மிக்க காரணத்துக்காக தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்தக் குடும்பத்தில் பிறந்த நான் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசை எதிர்த்து தந்தை பெரியார் பல கடுமையான, தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். விடுதலை ஏடு அதற்காகத் தந்தை பெரியார் அவர்களின் போர்வாளாக இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையிலும் அவற்றையும் தாண்டி அதன் சாதனைக்காக பகுத்தறிவுக் கொள்கைளை அங்கீகரித்து இந்திய அரசு சிறப்பு உறையை வெளியிட்டு உள்ளது. இது நம் கருத்துகளுக்கு திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். நாத்திக ஏடு என்றால் வித்தியாசமான பார்வையில் அணுகப்பட்ட காலம் போய், இந்திய அரசே ஏற்று அங்கீகரிக்கும் நிலை ஏற்பட்டது கூட சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம்தான். ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிடவேண்டும் என்றால் எவ்வளவோ நிபந்தனைகள் வைக்கப்பட்ட காலமெல்லாம் இப்போது மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன’’ என்று கூறினார்.

”நான் யார் என்றால் மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்று ஒரு வரியில் பதில் சொன்னவர் நமது மானமிகு கலைஞர் அவர்கள். அவரின் ஆதரவால் இன்றைய நாள் ஒரு மத்திய அமைச்சர் ஆகியிருக்கிறேன். இந்தத் துறை அமைச்சர் பொறுப்பேற்று செய்ய வேண்டிய முக்கிய கடமையை ஆற்றியிருக்கிறேன் - இதன் மூலம் மனநிறைவடைகிறேன்’’ என்றும் ஆ.இராசா குறிப்பிட்டார்.

”1931 இல் அந்நியன் யார் என்ற கேள்விக்கு தந்தை பெரியார் பதில் சொன்னார்: என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வர வேண்டாம் - தொட வேண்டாம் என்பவனும், கிட்ட வந்தாலே, கண்ணில் பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதைச் சாப்பிட்டால், என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அந்நியனா? அல்லது உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை, தொட்டாலும் பரவாயில்லை; நாம் எல்லோரும் சமம்தான் என்று சொல்லுகிறவன் அந்நியனா? என்பதை யோசித்துப் பாருங்கள் (குடி-அரசு 6.-9.-1931) என்று தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார்’’ என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆ.இராசா, ’’எங்கிருந்தோ வந்த சோனியா காந்தி சேது சமுத்திரத் திட்டம் தேவை என்கிறார். ஆனால் இங்கு இருக்கும் ஒரு பார்ப்பன அம்மையாரோ அந்தத் திட்டம் கூடாது என்று நீதிமன்றம் வரை செல்கிறார். இதில் யார் அந்நியர்?’’ என்று வினா எழுப்பினார்.

இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர் க. பொன்முடி, என்கேகேபி. இராஜா, நடுவண் இணை அமைச்சர் காந்திசெல்வன், இராஜராஜன் அய்.பி.எஸ். மற்றும் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more...

Monday, August 24, 2009

பெரியாரின் பார்வையில் நாட்டு பற்று - மொழி பற்று : அமைச்சர் ஆ.இராசா உரை

ண்ணகிக்குச் சிலை வைத்தபோது தந்தை பெரியார் அதை ஏற்கவில்லை. ஏனென்றால் பெண்களை அடிமைப்படுத்துகின்ற ஒரு weapon, ஒரு கருவி கற்பு, கற்பு என்றால் அது ஆணுக்கும் இருக்க வேண்டும். நான் என்னவிதமான ஒழுக்கத்தை என்ன விதமான நடத்தையை இராஜதுரை அவர்கள் என்மீது காட்டவேண்டுமென்று எண்ணுகிறேனோ அதை நான் அவரிடத்திலேயும் காட்டவேண்டும், மற்றவருக்கும் காட்டவேண்டும். அது தான் கற்பு, அதுதான் ஒழுக்கம்.

ஒழுக்கத்துக்கு ரொம்ப எளிமையாக விளக்கம் சொன்னார் பெரியார்: ``நான் உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறேனோ அதை நீ என்னிடம் எதிர்பார்ப்பதற்கும் இன்னொருவனிடம் நான் எதிர்பார்ப்பதற்கும் ஒன்றாக இருக்கவேண்டும். இதுதான் ஒழுக்கம்’’. அந்த அடிப்படையில் கண்ணகிக்கு சிலை வைப்பதைக்கூட தந்தை பெரியார் விமர்சித்தார்.

ஆனால் அண்ணா வேறு விதமாகச் சொன்னார்: கற்பு உண்டா இல்லையா என்பது வேறு, கண்ணகி கற்புக்கு அரசியா என்பது வேறு , ஆனால் இந்த மண்ணில் ஒருகலாச்சாரப் படையெடுப்பு நடந்திருக்கிறது. ஒரு உயர்ந்த செம்மாந்த வாழ்க்கை, ஒருவனுக்கு ஒருத்திதான் வாழவேண்டுமென்கின்ற வாழ்க்கை. ஒரு வேளை விதவையாகிவிட்டால் அந்த விதவையை மறுமணம் வேண்டுமென்கின்ற உரிமைகூட இந்த தொல்சமுதாயத்தில் இருந்திருக்கிற இந்த தமிழ் சமுதாயத்தில் திடீரென்று `ஐவனுக்கும் தேவி அழியாத பத்தினி’ என்று திரௌபதி அம்மனுக்குக் கோயில் கட்டவேண்டிய அவசியம் என்ன? இந்தக் கலாச்சாரப் படையெடுப்பை மறுப்பதற்காகத்தான் கண்ணகிக்கு நான் சிலை வைக்கிறேன்.

கண்ணகிக்கு சிலை இந்த திராவிட இயக்கத்திற்கு அவசியப்பட்டதற்குக் காரணம் , இது எங்கள் அடையாளம், இது எங்கள் நாகரீகம், இது எங்கள் பண்பாடு, வரலாறு என்று சொல்வதற்கு ஒரு அண்ணா இந்த மண்ணிற்கு அவசியப்பட்டதாக அண்ணா கருதிக்கொண்டார். எனவே திராவிட சட்டகம் என்கின்ற சட்டகத்திற்குள் பெரியார் தன்னை அடக்கிக்கொண்டதற்குக் காரணம் ஆரியருக்கு எதிர்ப்பு, இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் பிராமணர்களுக்கு எதிர்தளத்தில் இயங்குவதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது அவ்வளவு தான். அதற்காக திராவிடர் அல்லாத ஒரு சமுதாயம் இந்த மண்ணிலே வாழக்கூடாது என்றோ, அவர்களுக்கு உரிமையற்றுப் போய்விட வேண்டுமென்றோ பெரியார் ஒரு போதும் கருதியவர் அல்ல.

”எனக்கு மொழிப்பற்று கிடையாது, நாட்டுப்பற்று கிடையாது, தேசியக்கொடி என் கோவணத் துணி, இந்திய வரைபடத்தை எரிப்பேன்”

என்று எதையெல்லாம் எரிக்கமுடிந்ததோ அதையெல்லாம் செய்தவர் தந்தை பெரியார். இன்னும் கூட நான் சொல்லுவேன். ஒரு காலத்தில் இந்த நாட்டின் மீது சீனா படையெடுத்து வந்த போது இந்த நாட்டிலுள்ள தலைவர்களெல்லாம் துண்டேந்தி வசூல் செய்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரறிஞர் அண்ணா உட்பட. ஆனால் பெரியார் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை. நான் கர்ப்பக்கிரகத்திற்குள்ளே போகிறேன் என்று சொன்னார்.
பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், ”சீனா படையெடுத்து வருகிறது, நாடு பறிபோகிறது, நீங்கள் இப்போதுதான் ஜாதியை ஒழிக்கிறேன். மதத்தை ஒழிக்கிறேன் என்கிறீர்களே?’’ என்று கேட்ட போது பெரியார் சொன்னார்: ”ஒ ரு வேளை சீனாக்காரன் படையெடுத்து வந்து என் சூத்திரப்பட்டம் போகுமானால், பற, பள்ளுபட்டம் போகுமானால் அவனையும் வரவேற்பதற்கு நான் தயார்’’

இவ்வாறு சொல்லுவதற்கு ஒரே ஒரு தலைவன் தான் இந்த மண்ணிலே இருந்தார். எனவே இருவரும் வேறுபட்ட அடையாளங்களோடு இருந்த தலைவர்கள். அம்பேத்கர் தேசியத்தை விரும்பியவர், பெரியார் தேசியத்தை விரும்பியவர் அல்ல. தேசியம் ஒரு கற்பிதம் என்று சொன்னவர்,
நாட்டுப்பற்று பொய் என்று சொன்னவர், நேற்றுவரை பாகிஸ்தான் நம்மோடு இருந்தது, நாளைக்கு அது பிரிந்துபோய் விட்டால் அதன்மீதும் நாட்டுப்பற்று உனக்கு வருமா எனக் கேட்டவர். எனவே பெரியாருக்கு நாட்டுப்பற்று கிடையாது, பெரியாருக்கு மொழிப்பற்று கிடையாது. உண்மையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையேகூட தமிழ் மேல் இருக்கிற காதலால் தந்தை பெரியார் செய்யவில்லை, இந்தி இங்கு வந்துவிடக்கூடாதே என்கின்ற அந்த வேகத்தில்தான் தந்தை பெரியார் செய்கின்றார்.

அதற்கு ஒரு அருமையான தலையங்கத்தையே தீட்டினார். தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தில் ஒன்று, இரண்டு உணர்ச்சிப் பூர்வமானவை.

நாகம்மை மறைந்த போது எந்தக் கணவனும் அப்படி எழுத முடியாது.

தன்னுடைய துணைவியார் மறைந்த பொழுது எழுதினார்:
``எனக்கு இருக்கிற ஒரே தடையும் போய்விட்டது, என்னுடைய சுகம் போய்விட்டது எனச் சொல்வேனா? சொத்துப் போய்விட்டது எனச் சொல்வேனா? எனக்கு இருந்த ஒரே ஒரு நலன் போய்விட்டது என்று சொல்வேனா? நாகம்மை வாழ்ந்தது எனக்காகவே தவிர தனக்காக அல்ல’’
என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டுச் சொல்கிறார்: ”இருந்தாலும் ஒழிந்தது, இன்றோடு எனக்கிருந்த ஒரு தடை ஒழிந்தது. இனிமேல் இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்காக என் வாழ்நாட்களை அர்ப்பணிக்கப்போகிறேன்''

மனைவி இறந்த போது கூட இப்படி ஒரு கட்டுரையை ஒரு தலைவனால் எழுத முடியுமென்கின்ற வரலாறு பெரியாருக்கு உண்டு.

அந்தப் பெரியார் மறைமலையடிகளுக்கு ஒரு முறை ஒரு கடிதம் எழுதினார்: நான் உங்களைப் பல்வேறு விதமாக விமர்சித்திருக்கிறேன். உங்களுடைய சைவக்கோட்பாடு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் பேசுகின்ற தனித்தமிழ் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் தனித்தமிழ்க் கோட்பாடு என்பது பிராமணர்களுக்கு எதிராக சைவ வேளாளப் பண்பாடு என்கின்ற தளத்தோடு நின்று போய்விட்டது. தனித்தமிழ் இயக்கம் தேவைதான். தனித்தமிழ் இயக்கம் எதுவரை வந்தது என்றால் மொழியைப் பிரித்துப் பார்த்ததே தவிர கீழே இருக்கிற ஜாதி ஒழிய வேண்டுமென்று விரும்பவில்லை. அது சைவ வேளாளப் பண்பாடு என்கின்ற அந்தத் தளத்தோடு தனித்தமிழ் இயக்கம் நின்று போய் விட்டது. இதை தந்தை பெரியாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், உங்கள் மீது எனக்கு நிறைய கருத்து மாறுபாடு உண்டு, உங்களோடு உடன்படாத தளங்கள் நிறைய உண்டு, என்றாலும் தமிழை நாம் காப்பாற்றவேண்டியதற்குக் காரணம், தமிழர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து விடுவார்கள், தமிழ் மொழி இல்லாவிட்டால் தமிழ் மக்கள் சுபிட்சமாக வாழமுடியாது என்பதற்காக உங்களை அழைக்கிறேன். கடந்த காலத்தில் தவறு செய்திருந்தால் அய்யா அவர்கள் மன்னித்து அருளுங்கள் என்று எழுதியவர் தந்தை பெரியார்.

ஆக, நான் இவ்வளவு பூடகம் போட்டுப் பேசுவதற்குக் காரணம், அம்பேத்கர் இயங்கிய தளம் வேறு, தந்தை பெரியார் இயங்கிய தளம் வேறு, இவர்களுக்குள் இருக்கிற ஓர்மை வேறு இடத்திலே வருகிறது. எதிலே வருகிறது?
(தொடரும்...)

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO