#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Sunday, July 18, 2010

ஏமாறுபவர்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டும் : கலைஞர் பேட்டி


சென்னை:

போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு விவகாரத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏமாற்றுபவர்கள் பற்றி நமக்கு கவலையில்லை. ஏமாறுபவர்கள் பற்றித்தான் நாம் கவலைப்படவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் மாணவர்களுக்கு சேர்க்கை இடம் வழங்கப்பட்டு வருகிறது. சில மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கலந்தாய்வில் பங்கேற்றது தெரியவந்தது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் கலந்தாய்வை தமிழக முதல்வர் கலைஞர் ஞாயிற்றுக்கிழமை காலை பார்வையிட்டார். கலந்தாய்வு நடைபெறும் அரங்கம் முழுவதையும் சுற்றிப்பார்த்து விட்டு, துணைவேந்தர் மன்னர் ஜவகரிடம் கலந்தாய்வு பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் கலைஞர் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில், ”பொறியியல் படிப்பில் தமிழ்வழிக் கல்வியில் இதுவரை 149 பேர் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். குடும்பத்தில் தாத்தா, பாட்டி, தாய், தந்தை, அக்கா, அண்ணன் உள்பட யாரும் படிக்காமல் முதல் தலைமுறையாக படிக்க வரும் மாணவருக்கு இலவச கல்வி உள்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. முதல் தலைமுறை மாணவர்கள் இதுவரை 76 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 13,437 பேர் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சர், துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி வளாகங்களில் சுற்றித்திரியும் தரகர்களை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றுபவர்கள் பற்றி நமக்கு கவலையில்லை. ஏமாறுபவர்கள் பற்றித்தான் நாம் கவலைப்படவேண்டும். எனவே, மோசடி பேர்வழிகளிடம் ஏமாறாமல் இருக்கவேண்டும். போலி மதிப்பெண் பட்டியல் மோசடியில் மாணவர்கள், தரகர்கள் உள்பட யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாநில உயர்கல்வித்துறை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more...

Tuesday, July 13, 2010

ரூ.12 ஆயிரம் கோடியில் தகவல் தொழில்நுட்ப வங்கிகள்: ஆ.இராசா

இந்தியாவில் ரூ. 12,000 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப வங்கிகள் அமைக்கப்படும் என்று, மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் .இராசா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தை முழு கணிணி மாவட்டமாக மாற்றும் திட்டத்தின் தொடக்க விழா உதகமண்டலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் ஆ.இராசா பேசுகையில், “இந்தியாவில் அனைத்து நிருவாகங்களையும் கணிணிமயமாக்கும் வகையில் 50 மாவட்டங்கள் முழு கணிணி மாவட்டங்களாக மாற்றப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் கோவை, அரியலூர், கிருட்டினகிரி, பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் முழு கணிணி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது 6-ஆவது மாவட்டமாக நீலகிரி மாவட்டத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வருவாய்த்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகிய 4 துறைகளில் அனைத்து தகவல் பரிமாற்றங்களும் கணிணி மூலமே மேற்கொள்ளப்படும். நிலப்பதிவேடுகள், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ் போன்றவற்றை பெற கணிணி மூலமே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.

”இப்போது தொடங்கப்பட்டுள்ள முழு கணிணி மாவட்டமாக மாற்றும் திட்டம் 2 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும். இதற்கான பயிற்சிகளும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும். இதைத் தவிர இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் ரூ. 12,000 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப வங்கிகள் அமைக்கப்படும். அதேபோல, நாட்டில் ஒரு இலட்சம் சிற்றூர்களில் பொது சேவை நடுவங்களும் உருவாக்கப்படும். அரசு அலுவலகங்களிலிருந்து தகவல்களை பெற விரும்புவோர் பொது சேவை நடுவங்களின் மூலமும் விண்ணப்பித்து உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO