#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Friday, April 23, 2010

ஸ்பெக்ட்ரம் விசாரணைக்கு தயார்: அமைச்சர் ஆ.இராசா சவால்

ஸ்பெக்ட்ரம் ஏல ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. இது குறித்த எந்தவித விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன் என்று நடுவண் தகவல் தொடர்பு மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா தில்லி மேல் சபையில் கூறினார்.

2008 ஆம் ஆண்டு 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை அலைவரிசைகளை ஏலம் விட்டதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் 3 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் மூன்றாம் தலைமுறை ஒளிக்கற்றை அலைவரிசைகள் தற்போது ஏலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து தில்லி மேல் சபையில் துணை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் .இராசா கூறியதாவது:

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ.யில் ஒரு வழக்கு இருப்பது எனக்குத் தெரியும். இது குறித்து எத்தகைய விசாரணையையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கேள்விகளையும் எதிர்கொள்ளும் விதமாக அது குறித்த அனைத்து தகவல்களையும் தரத் தயாராக இருக்கிறோம். தற்போது 3 ஜி அலைக்கற்றை ஏலம் முழுவதும் வெளிப்படையான முறையில் நடத்தப்படுகிறது. இதனை மத்திய ஊழல் கமிஷனும், இதர அமைப்புகளும் கண்காணித்து வருகின்றன. 3 ஜி அலைக்கற்றை ஏல ஒதுக்கீடு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லின் கொள்கை முடிவாகும். இந்த அலைக்கற்றைகளை ஏலம் விடுவதில் தாமதம் ஆனதற்கு காரணம் ரேடியோ அலைவரிசைகள் கிடைக்காததும், இவற்றில் எத்தனை பேருக்கு அனுமதி வழங்குவது என்பதில் நிலவிய கருத்து வேறுபாடுகளும்தான்.

3 ஜி அலைக்கற்றை ஏல ஒதுக்கீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உருவாக்கப்பட்டு பின்பு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சிறு திருத்தம் செய்யப்பட்டது. எனினும், 3 ஜி அலைக்கற்றைகளை பெறுவது, எத்தனை தொகுதிகளாக அவற்றை ஏலத்தில் விடுவது, மற்றும் முன் நிர்ணயவிலை ஆகியவை தொடர்பான சில பிரச்சினைகளால் ஏலம் விடுவதில் தாமதம் ஏற்பட்டது.

ஸ்பெக்ட்ரம் மூலம் அரசுக்கு ரூ. 45 ஆயிரம் கோடி கிடைக்கும்

கடந்த ஆண்டு 3 ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதை கவனித்துக் கொள்ள மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்த அமைச்சர்கள் குழு சில தடவை சந்தித்த பின்பு, ஏலத்தை விடுவதற்கு முடிவு செய்தது. அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 9 -ஆம் தேதி முதல் 3 ஜி அலைக்கற்றை ஏலத்தில் விடப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தின் மூலம் 35 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று மத்திய அரசு முதலில் எதிர்பார்த்தது. ஆனால் இது 45 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி விடும் என்று தற்போது மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் ஆ.இராசா, ஸ்பெக்ட்ரம் பற்றி தனது கருத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

Read more...

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி : அமைச்சர் ஆ.இராசா வழங்கினார்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடுவண் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் .இராசா, நடுவண் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை அமைச்சர் து.நெப்போலியன் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் மா.விஜயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் இராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். ..................................................................................................................................

புதிய வங்கிக் கிளை திறப்பு
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் புதிய வங்கி கிளையை நடுவண் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் .இராசா திறந்துவைத்தார். இந்த நிகழ்வில், நடுவண் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை அமைச்சர் து.நெப்போலியன், மாவட்ட ஆட்சியர் மா.விஜயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் இராஜ்குமார், மண்டல மேலாளர் வதராசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.............................................................................................................
நோயர் குணமடைய அமைச்சர் வாழ்த்து
பெரம்பலூர் அற்புதா மருத்துவமனைவில், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களை நடுவண் அமைச்சர்கள் .இராசா, து.நெப்போலியன் ஆகியோர் சந்தித்து, முதல்வர் கலைஞர் அவர்களின் வாழ்த்து கடிதத்தை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் மா.விஜயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் இராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more...

Wednesday, April 14, 2010

அம்பேத்கர், பெண்ணுரிமைக்காக போராடவில்லையா? : அமைச்சர் ஆ.இராசா பேச்சு

பெரியார் பேசிய அளவிற்கு, போராடிய அளவிற்கு அம்பேத்கரை ஒரு பெண்ணுரிமைப் போராளியாக அடையாளப்படுத்த முடியவில்லை என்று சொல்லுகிறார்கள். அம்பேத்கர் பெண்ணுரிமைக்காக தனியாகக் குரல் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவருடைய குரல் வேறு விதமாக இருக்கிறது.

Rise and fall of Hindu women என்று ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார். பெரியார் பெண் விடுதலையை பகுத்தறிவிலிருந்து - பகுத்தறிவுத் தளத்திலேயிருந்து பார்த்தார். அம்பேத்கர் ஜாதி ஒழிய வேண்டுமென்று விரும்பினார், பெரியாரைப் போலவே ஆய்வு செய்தார், எழுதினார், எல்லாம் உண்மைதான். ஆனால், விடுதலையை ஒரு ஆன்மீகத் தளத்திலிருந்து பார்க்க விரும்பினார். பவுத்தத்திற்குப் போனார். பவுத்தத்தில் பெண்களுக்கு எல்லா உரிமையும் இருந்தது. அதைவிட அம்பேத்கரை நாம் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு இடம். நான் அதற்குப் பின்னால் வருகிறேன்.

பெரியார் செய்த காரியத்தை, பிரச்சாரம் செய்த காரியத்தை அம்பேத்கர் மிகச் சாதுர்யமாக அரசியல் சட்டத்திலே கொண்டு வர முயற்சி செய்தார் என்பதை நான் அடுத்த ஓரிரு நிமிடங்களில் சொல்ல இருக்கிறேன். இந்த இடத்திலே வருகிற பொழுது Suppression of women, Mf Graded inequality, Prohibition of education, Prohibition of ower Ban on property, Suppression of women- இதுதான்.
இந்த இந்துயிசம் இந்த ஐந்து கோட்பாடுகளை வைத்திருக்கிறதே இதனுடைய விளைவு இந்த சமூகத்தில் மட்டும்தானா? அரசியலில் கிடையாதா என்றால் அரசியலில் இந்த சமூகத்தினுடைய அமைப்பின் சார்ந்த சாரம் எல்லா இடங்களிலேயும் ஒரு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
பெருஞ்சித்திரனார் ரொம்ப அழகாகச் சொல்லுவார்- இந்த நாட்டினுடைய விடுதலையை நான் குறைவுபடுத்தவில்லை, நான் இந்திய அரசாங்கத்தினுடைய அமைச்சர், என்னுடைய காரில் தேசியக்கொடி பறந்துகொண்டிருக்கிறது. எனக்கு தேசப்பற்று இருந்தாக வேண்டும். ஆனால் வரலாற்றைச் சொல்லுகிற பொழுது சரியாகச் சொல்லவேண்டும் பெருஞ்சித்திரனார் சொல்லுகிறார்:
வெள்ளைக்காரர்களுக்கு வால்பிடித்தார்களா?
நல்லவேளை வெள்ளைக்காரன் வந்தான், நம்மையெல்லாம் காப்பாற்றினான், அவன் மட்டும் வராமல் போயிருந்தால் நாமெல்லாம் நரியாக, பூனையாக ஊளையிட்டுக்கொண்டிருந்திருப்போம். இதை நாம் மறுப்பதற்கில்லை. அதனால்தான் பெரியார் மீதும் அம்பேத்கர் மீதும் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு இருக்கிறது. இவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு வால்பிடித்தார்கள். சுதந்திரம் வேண்டாம் என்று பெரியார் சொன்னார். அம்பேத்கர் இன்னும் வேகமாக ஒரு இடத்திலே சொன்னார். பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இருக்கிற ஒற்றுமையைப் பார்க்க வேண்டும்.
பெரியார் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிற போது, வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக் கொடுத்த மேட் ஓவர். - இந்த வார்த்தையை அய்யா அப்படியே சொல்லியிருக்கிறார்:
சுதந்திரம் என்பது வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக் கொடுத்த மேட் ஓவர். நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். இதைச் சொல்லுகிற போது 1947. ஆனால் இது 1937 , 39லேயே அம்பேத்கருக்கு ஒரு சங்கடம் வருகிறது.
இரண்டாம் உலகப்போர் வந்த போது அந்த இரண்டாம் உலகப்போரில் வின்சென்ட் சர்ச்சில் இங்கிலாந்தினுடைய பிரதமர். நம்முடைய நாடு அவருக்குக் கீழே இருக்கிறது. அவர் ஹிட்லரை எதிர்க்கவேண்டும் என்பதற்காக இந்தியத் துருப்புகளைப் பயன்படுத்துகிறார். யாருக்கு எதிராக? நாஜிப்படைகளுக்கு எதிராக. ஹிட்லருக்கு எதிராக இந்தியாவினுடைய துருப்புகளை அவர் பயன்படுத்துகிற பொழுது, காந்தி ஒரு கேள்வியை வைக்கிறார் காங்கிரஸ் சார்பில்.
என்ன கேள்வி என்றால் ``வின்சென்ட் சர்ச்சில் அவர்களே, உங்களுக்கு எதிரி ஹிட்லர், எங்களுக்கு அல்ல. இந்தப் போரில் எங்களுடைய சிப்பாய்களை, எங்களுடைய துருப்புக்களை, எங்களுடைய ஆயுதங்களை நீங்கள் பயன்படுத்தப்போகிறீர்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் எங்களுக்குக் கிடைக்கப் போவது என்ன?’’ என்று கேட்கிறார்.
What will be the benefit after the war, having deployed our sources? இது காந்தி வைக்கிற கேள்வி, வின்சென்ட் சர்ச்சிலுக்கு. வின்சென்ட் சர்ச்சில் ரொம்ப அமைதியாக பதில் சொன்னார்: To restore traditional Britain -நான் என்னுடைய மரபுமிக்க தொன்மைமிக்க பெருமை மிக்க பிரிட்டனை நான் மீண்டும் பெறுவதற்காகத் தான் போராடப் போகிறேன்.

எவ்வளவு பெரிய கொழுப்பு? காந்தியாருக்குக் கோபம். என்னுடைய சகோதரன் இரத்தம் இழக்கிறான். என்னுடைய சகோதரன் வாழ்வை இழக்கப்போகிறான். குற்றுயிரும், குலைஉயிருமாக இளம் மனைவிகளை இழக்கப்போகிற கணவனை என் கண்ணெதிரிலே பார்க்கிறேன். ஆனால் நீ சொல்லுகிறாய், To restore traditional Briton உன்னுடைய சிப்பாய்களை நான் கொல்லப்போகிறேன் என்று சொன்னால் இது உனக்குத் திமிரல்லவா என்று கேட்கிறார். இது யங் இண்டியாவில் வருகிறது.

காந்தியை தடுமாறவைத்த அம்பேத்கர்!
அடுத்தநாள் அம்பேத்கர் கேட்கிறார். Yes, the question that was asked by Mr.Gandhi is legitimate காந்தி கேட்கிற கேள்வி ரொம்ப நியாயமான கேள்வி. ஆனால் திரும்ப நான் கேட்கிறேன் காந்தியை. வின்சென்ட் சர்ச்சிலுக்கு சிப்பாயை அனுப்பிவிட்டு என்ன பயன் என்று கேட்கிறாயே? நான் கேட்கிறேன், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டுமென்று நீ கேட்கிறாயே, அந்த சுதந்திரத்திற்குப் பின்னால் எனக்கும் பிற்படுத்தப்பட்டவனுக்கும் பற, பள்ளனுக்கும் என்ன கிடைக்கப் போகிறது? What will be the social order after independence since you are fighting for independence? இந்தக்கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு நீ அவனுக்குக் கேள் என்று அம்பேத்கர் கேட்டபோதுதான் காந்தி தடுமாறிப் போனார்.

இது வரலாறு. இதைத் தான் தந்தை பெரியார் வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக்கொடுத்த மேட் ஓவர் என்று சுதந்திரத்தைச் சொல்கிறார்.

Read more...

Thursday, April 08, 2010

செல்பேசிகள் மூலம் சுகாதாரம், கல்வி, வணிகச் சேவைகள் குறித்து ஆய்வு : அமைச்சர் ஆ.இராசா

புது தில்லி:

சுகாதாரம், கல்வி, வேளாண்மை, வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் பொது மக்களுக்கு மொபைல் போன்கள் மூலம் சிறப்பான சேவைகள் அளிப்பது குறித்து விரிவாக ஆராய வேண்டும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் . இராசா கேட்டுக் கொண்டுள்ளார்.

புது தில்லியில் 7.4.2010 அன்று டிராய் எனப்படும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீடித்த முன்னேற்றத்திற்கு செல்பேசி பயன்பாடுகள் என்பது குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஆ.இராசா உரையாற்றுகையில், “நம்முடைய பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கும் பல்வேறு துறைகளின் நவீனமயமாக்கலுக்கும் தொலைத் தொடர்புகள் ஒரு முக்கிய ஆதரவு சேவையாக உருவாகியுள்ளது. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப வசதிகள் சிறந்த தகவல்கள் கிடைப்பதற்கு உதவுவதுடன் பொது மக்களின் சிறப்பான கல்விக்கும் சமூக இணைப்பு முன்னேற்றத்திற்கும் மேம்பட்ட வணிக வாய்ப்புகளுக்கும் உதவுகிறது. இன்றைக்கு இந்திய தொலைத் தொடர்பு இணைப்பானது உலகில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப சந்தையில் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு இணைப்பாகத் திகழ்கிறது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை 60 கோடி தொலைபேசி சந்தாதாரர்கள் உள்ளனர். 2014-ஆம் ஆண்டில் இது 100 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரியில் மட்டும் 18 மில்லியன் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனர். கிராமப்புற பகுதிகளில் 32 சதவீத தொலைபேசிகள் உள்ளன’’ என்று குறிப்பிட்டார்.

”வெகு அண்மைக்காலம் வரை செல்பேசிகள் (மொபைல் போன்கள்) குரல் மற்றும் வார்த்தை செய்திகள் அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது அடிப்படையான குரல் சேவைகளையும் தாண்டி இணையம் மற்றும் அகண்ட அலைவரிசை சேவைகளையும் அளிக்கக் கூடிய வகையில் உள்ளன. அகண்ட அலைவரிசை சேவையின் பரவல் நம்நாட்டில் குறைவாக உள்ளது. நிலையான கம்பிவட இணைப்புகளுக்கு மட்டுமே தற்போது அகண்ட அலைவரிசை அளிக்கப்படுகிறது. இந்த கம்பிவட இணைப்பு அகண்ட அலைவரிசை வழங்குவதற்கு உகந்ததாக இல்லை. 3ஜி அலைவரிசை தற்போது ஏலம் விடப்பட்டு இருப்பதால் சேவைகளை தனியார் நிறுவனங்களும் வழங்க முடியும். இந்த 3ஜி அலைவரிசை மூலம் கம்பிவடம் இல்லாத அகண்ட அலைவரிசை சேவைகளையும் வழங்க முடியும். இதன் மூலம் அதிகளவில் அகண்ட அலைவரிசை சேவை கிடைக்கும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

பல்வேறு சேவைகளை வழங்குவதில் மிக சக்தி வாய்ந்த ஒரு சாதனமாக செல்பேசிகளின் பயன்பாடு உருவாகி இருக்கிறது. இதன் பயனாக கணினி, தொலைக்காட்சி, திரையரங்கம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நான்காவது திரையாக செல்பேசி உருவாகியிருக்கிறது.
அடிப்படையான தொலைத் தொடர்பு சேவைகள் மட்டுமின்றி செல்பேசி - ஆளுமை, செல்பேசி-வணிகம், செல்பேசி - கல்வி, செல்பேசி -வேளாண் , செல்பேசி - சுகாதாரம் போன்ற சமூக நன்மைக்கான மேம்பட்ட சேவைகளை செல்பேசிகள் மூலம் அளிக்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது. செல்பேசிகளின் பயன்களை தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிகப்படுத்தியுள்ளன. கணினி செயல்பாடுகள், மென்பொருள், மல்டி மீடியா, விளையாட்டு மற்றும் இ படிப்பு போன்ற மேம்பட்ட வசதிகள் காரணமாக ஸ்மார்ட் செல்பேசிகள் அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. 2015-ஆம் ஆண்டில் கப்பலில் அனுப்பப்படும் மூன்றில் ஒரு பங்கு செல்பேசிகள் ஸ்மார்ட் செல்பேசிகளாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது’’ என்றும் அவர் கூறினார்.

”தற்போது இந்தியாவில் சுமார் 80 முதல் 90 இலட்சம் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இது வருங்காலத்தில் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சி மற்றும் செல்பேசிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இந்தியாவில் பொழுது போக்கு, தகவல், விளம்பரம் மற்றும் சமூக இணைப்பு ஆகியவற்றுக்காக மட்டுமே தற்போது செல்பேசிகள் பயன்படுத்தப்படுகின்றன.
கட்டணங்களை கட்டுதல், தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு செய்தல், பணபரிமாற்றம் ஆசிய வணிக சேவைகளுக்கும் செல்பேசிகள் பயன்படுத்தப்படுகின்றன. செல்பேசிகளின் வணிக சேவை துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் இன்னும் அவை தொடக்க நிலையிலேயே உள்ளன. உருவாகி வரும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்வதில் அரசு அக்கறையுடன் உள்ளது. சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, காவல் துறை, செலுத்துதல், நீதி மற்றும் சட்ட சேவைகள் போன்றவை தொடர்பான பல்வேறு வகையான அரசு சேவைகளை செல்பேசிகள் மூலம் அளிக்க முடியும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா குறிப்பிட்டார்.

”கிராமப்புற மக்களில் பெரும்பாலோர் ஒரு வங்கிக் கணக்கைகூட வைத்திருக்கவில்லை என்பதை தேசிய மாதிரி ஆய்வு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அடிப்படையான நிதிச் சேவைகள் பெறுவதற்குகூட அவர்களுக்கு வசதியில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. விவசாயக் குடும்பங்களில் 13 விழுக்காட்டினர் மட்டுமே வங்கிக் கடன்கள் பெறுகின்றனர். எல்லா கிராமப்புற பகுதிகளிலும் வங்கிக் கிளைகள் இல்லாததே இதற்கு அடிப்படை காரணமாகும். வங்கிகளுடன் தொடர்பு இல்லாதவர்களுக்கு செல்பேசி மூலம் வங்கிச் சேவை அளிப்பது பயனுடையதாக அமையும். செல்பேசி - வங்கிச் சேவைக்காக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் துடிப்புடன் பணியாற்றி வருகிறது. இத்திட்டம் அடுத்த சில மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றும் அமைச்சர் கூறினார்.

”அண்மையில் அனைவருக்கும் கல்வி உரிமையை அரசு அறிமுகப்படுத்தியது. கிராமப்புற மற்றும் தொலை தூரப் பகுதிகளில் முறையான கல்வி நிறுவனங்கள் குறைவாக உள்ளன. அதற்கு செல்பேசி கல்வி முறை சிறப்பானதாக இருக்கும். இதே போல சுகாதாரச் சேவைகள், வேளாண் சேவைகள் போன்றவற்றையும் செல்பேசிகள் மூலம் சிறந்த முறையில் வழங்க முடியும். ஒவ்வொரு தனிநபருக்கும் தனிப்பட்ட முறையில் சேவைகளை வழங்குவதற்கு செல்பேசிகளின் பயன்பாடு குறித்து ஆராய்வதற்கான நேரம் தோன்றியுள்ளது. அந்த வகையில் செல்பேசிகளின் பயன்பாட்டு வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புள்ளது. அத்திசையில் இந்த கருத்தரங்கம் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா சுட்டிக்காட்டினார்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO