#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Wednesday, October 28, 2009

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முந்தைய முறையை நானும் செய்தேன் - பதவி விலகல் பேச்சு எழ வாய்ப்பே இல்லை : அமைச்சர் ஆ.இராசா விளக்கம்


புது தில்லி, அக்.28-
எனக்கு முந்தைய அமைச்சர்கள் எல்லோரும் பின்பற்றிய நடைமுறைகளைத்தான் நானும் செய்தேன். சட்ட விதிகள் மீறல் எதுவும் இல்லை. எனவே, இதில் பதவி விலகல் பேச்சு எழ வாய்ப்பே இல்லை என்று நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா கூறியுள்ளார்.

நடுவண் அரசின் சோலிசிட்டர் ஜெனரல் தெளிவான ஒப்புதல் வழங்கிய பிறகு, பிரதமருடன் கலந்தாய்வு நடத்தி, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்பதான் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நான் கூறி வருகிறேன். எனவே எவ்வித தெளிவின்மைக்கோ, விதி மீறல்களுக்கோ இடமில்லை. பா.ச.க. தலைமையிலான ஆட்சியினால் 1999-இல் கொண்டுவரப்பட்ட தொலைத் தொடர்புக் கொள்கையில் கூறப்பட்டுள்ள, முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற நன்கு நிலைநாட்டப்பட்ட கொள்கை நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது என்று என்று அமைச்சர் இராசா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இதே நடைமுறையைத்தான் எனக்கு முந்தைய அமைச்சர்கள் எல்லோரும் பின்பற்றி இருக்கிறார்கள். நானும் அதைத்தான் செய்தேன். எனவே பின்பற்றப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நடைமுறையைப் பொறுத்தவரையில் மீறல் எதுவும் இல்லை என்று ஆ.இராசா கூறினார்.

கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் நீங்கள் பழிவாங்கப்படுகிறீர்களா என்ற வினாவுக்கு, “அதிக நிறுவனங்கள் இருக்கக் கூடாது என்று முதலில் கருதப்பட்டது. அதனால் தேக்கநிலையும், ஒருவகையான தொழில்நிறுவனக் கூட்டணிகளும் இருந்தன. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) நெறிமுறைகளுக்கு ஏற்ப போட்டியைக் கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே அந்தப் போட்டி சில கொந்தளிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம். அது விசாரிக்கப்பட வேண்டும்” என்று இராசா விடை அளித்தார்
.
அவரது அமைச்சகத்தைத் தொடர்புபடுத்தி விசாரணைகள் நடந்து வரும் நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பற்றி கேட்டதற்கு, “பதவி விலகல் என்ற கேள்விக்கு எங்கே இடம் இருக்கிறது? அந்தக் கேள்வியே எழவில்லை. தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் ஏதும் நடைமுறைத் தவறுகள் செய்திருக்கிறார்களா என்பது புலனாய்வு அமைப்பின் முன்னால் இருக்கிறது. புலனாய்வு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நான் அதில் தலையிடவோ, விமர்சனம் செய்யவோ மாட்டேன் என்று அமைச்சர் ஆ.இராசா குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Tuesday, October 27, 2009

அமைச்சர் ஆ.இராசாவுடன் தென் கொரிய குழு சந்திப்பு


மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசாவை புது தில்லியில் தென் கொரிய குடியரசின் அதிபருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய அமைப்பான எதிர்காலம் மற்றும் தொலைநோக்கு குறித்த அதிபர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் வாக் செங்-ஜன் சந்தித்துப் பேசினார்.
.........................................................................................................


புது தில்லி,
தகவல் தொழில்நுட்பத் துறையில் கூட்டுறவுக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக டாக்டர் வாக் செங்-ஜன் தலைமையிலான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட தென் கொரிய குழுவினர் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசாவை புது தில்லியில் சந்தித்துப் பேசினார்கள்.

தென் கொரிய குடியரசின் அதிபருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய அமைப்பான எதிர்காலம் மற்றும் தொலைநோக்கு குறித்த அதிபர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் வாக் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னணு ஆளுமை, சைபர் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டுறவுக்காக இந்தியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே 2001-ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2006-வுடன் முடிவடைந்து விட்டது. தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் உள்ள ஆற்றல்களை பயன்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க இருநாடுகளும் விரும்புகின்றன. அதற்கு ஏற்ற வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Read more...

எம்டிஎன்எல் நிறுவனம் ரூ.35.43 கோடி பங்கு ஈவுத் தொகை, மத்திய அமைச்சர் இராசாவிடம் வழங்கியது

புது தில்லி,

போட்டி சூழல் இருந்த போதிலும் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் எம்டிஎன்எல் நிறுவனம் முந்தி நிற்க வேண்டும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா தெரிவித்துள்ளார். எம்டிஎன்எல் நிறுவனம் தனது சமூக கடமைகளை ஆற்றுவதற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

புது தில்லியில் எம்டிஎன்எல் வழங்கிய ரூ.35,43,72,740 தொகை பங்கு ஈவுத் தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். 25.09.2009 அன்று நடைபெற்ற எம்டிஎன்எல் நிறுவனத்தின் 23-வது ஆண்டு பேரவைக் கூட்டத்தில் ரூ.63 கோடி ஈவுத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ரூ.63 கோடியில் ரூ.35.43 கோடி இந்திய அரசுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கு ஈவுத் தொகைக்கான காசோலையை வழங்கிய எம்டிஎன்எல் தலைவர் ஆர் எஸ் பி சின்கா, கடந்த ஆண்டு எம்டிஎன்எல் நிறுவனம் 40 சதவிகிதம் ஈவுத் தொகை அளித்தாகவும் தற்போது சம்பள உயர்வு போன்றவற்றால் செலவுகள் உயர்ந்ததால் பங்கு ஈவுத் தொகையை குறைத்து கொள்ள நேரிட்டதாகவும் தெரிவித்தார்.

Read more...

Sunday, October 25, 2009

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை: ஆ. இராசா அறிவிப்பு


உதகமண்டலம், அக். 25-

இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும், இதற்காக பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உதகமண்டலத்தில் 24.10.2009 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும் விசயத்தில் எனக்கு முன் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்களும், அதிகாரிகளும் வகுத்து வைத்துள்ள விதிமுறைகளைத்தான் நான் கடைப்பிடித்தேன். அந்த விதிமுறைகளை நான் மீறவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று தெரிவித்தார்.

தொலைத்தொடர்பு அலுவலகங்களில் நடுவண் புலனாய்வுப்பிரிவினர் ஆய்வு நடத்தியதையடுத்து, நீங்கள் பதவி விலகுவீர்களா? என்று கேட்டபோது, “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டதாக நடுவண் புலனாய்வுப் பிரிவோ அல்லது வேறு ஏதேனும் அமைப்புகளோ அறிவிக்கவில்லை. எனவே, நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை” என்று ஆ. இராசா திட்டவட்டமாகக் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழக்குப் பொறுப்பேற்று நீங்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றனவே என்று கேட்டபோது, “எதிர்க்கட்சிகளிடமிருந்து இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும். தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் ஆற்றிய பணிகளை எதிர்க்கட்சிகள் பாராட்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என்று இராசா எதிர்வினா எழுப்பினார்.

Read more...

25 பைசாவில் போன் பேச வசதி : அமைச்சர் ஆ.இராசா தகவல்

அஞ்சல் அலுவலகங்களில் ‘உடனடி பன்னாட்டு பணப்பரிமாற்ற சேவை’ தொடக்க விழா 24.10.2009 அன்று கோவையில் நடந்தது. மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா புதிய சேவையை தொடக்கி வைத்தார். கோவை மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., கந்தசாமி, மாநகராட்சி மண்டல தலைவர் பைந்தமிழ்பாரி, செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
............................................................................................................................................................

கோவை:
‘‘இந்தியா முழுவதும் தொலைபேசியில் 25 பைசாவில் பேசும் வசதி அடுத்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும்,’’ என மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில், ‘உடனடி பன்னாட்டு பணிப்பரிமாற்ற சேவை’, அயல்நாட்டிற்கு பொருட்கள் அனுப்புவதற்கான ‘ஓர்முக கட்டண பெட்டி’ அறிமுக விழா கோவையில் 24.10.2009 அன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:
”5 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் நவீன தோற்றத்துடன் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பணியாற்றுவோர், வெளிநாட்டில் கல்வி கற்போர் உடனுக்குடன் பணப்பரிமாற்றம் செய்யலாம். உலகின் எந்த இடத்தில் இருந்து பணம் அனுப்பினாலும் ஒரு நிமிடத்தில் கிடைத்துவிடும். வெளிநாட்டுக்கு பொருட்கள் அனுப்ப ‘ஓர்முக கட்டண பெட்டிகள்’ ரூ.1000, ரூ.1500, ரூ.2500ல் கிடைக்கும். இதில் பொருட்களை வைத்து அனுப்பலாம். முதல்கட்டமாக கோவை, ஊட்டி அஞ்சல் நிலையங்களில் இவ்வசதி கிடைக்கும்’’ என்று கூறினார்.

“100 கோடி மக்கள் தொகையில் 42 கோடி பேர் தொலை பேசி இணைப்பு பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் 40 சதவீதம் பேருக்கு தொலைபேசி வசதியை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொலைபேசியில் 25 பைசாவில் பேசும் வசதி அடுத்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

Read more...

Thursday, October 22, 2009

பா.ம.க. கூடாரம் காலி! : அமைச்சர் ஆ.இராசா முன்னிலையில் இணைந்தனர்

பெரம்பலூர், அக்.22-

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் 3000 பேர் அக்கட்சியில் இருந்து விலகி மத்திய அமைச்சர் ஆ.இராசா முன்னிலையில் தி.மு.கழகத்தில் இணைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் கை.கி.செழியன் தலைமையில் பரவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கமலக்கண்னன், வடக்கலூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருவள்ளுவன், ஓகளூர் ஊராட்சிமன்றத் தலைவர் பூங்கோதை இராமலிங்கம், நன்னை ஊராட்சிமன்றத் தலைவர் அமிர்த கணேசன், கீழபெரம்பலூர் ஊராட்சிமன்றத் தலைவர் கொளஞ்சி, வேப்பூர் ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், செந்துறை ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் நல்லவடமலை, பாமக மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், பாமக செந்துறை ஒன்றிய கிளைச் செயலாளர் கொளஞ்சி, பாமக செந்துறை ஒன்றிய செயலாளர் படையப்பா, வேள்விமங்களம் இரவிக்குமார் உட்பட 3000 பேர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

க.ஆடுதுறை கிராமத்தில் உள்ள ஏ.கே.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, தி.மு.க.வில் இணைந்த அனைவருக்கும் அமைச்சர் ஆ.இராசா பொன்னாடை போர்த்தி வரவேற்றுப் பேசினார்.

அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:
அனைத்து சாதியினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் தலைவர் கலைஞர். இன்றைய தினம் பா.ம.க.விலிருந்து 3000 பேர் வந்து தி.மு.க.வில் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இங்கே ஊராட்சிமன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் போன்ற பொதுமக்களுக்கு பணியாற்றுபவர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்ற நிதிவசதியை தலைவரிடமும் தளபதியிடமும் கேட்டு பெற்றுத் தருவேன். கலைஞர் ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் நீங்கள் எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் இராஜ்குமார், சிவசங்கர், மாவட்டக் கழகத் துணை செயலாளர் துரைசாமி, மாவட்டத் துணை செயலாளர் வெங்கடாசலம், ஒன்றியச் செயலாளர் குன்னம் இராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Read more...

Wednesday, October 21, 2009

தமிழகத்தில் தான் அதிகளவு மக்கள் நலத்திட்டங்கள் : அமைச்சர் ஆ.இராசா பெருமிதம்


அரியலூர் மாவட்டம் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டம் 2009-10 ஆம் ஆண்டுக்கான கையேட்டை மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா வெளியிட மாவட்ட ஆட்சியர் ஆபிரகாம் பெற்று கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நஜ்மல் ஹோடா, ஆண்டிமடம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
..........................................................................................................................................................

வேப்பந்தட்டை
, அக். 22-

இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் அதிகளவில மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா பெருமிதத்துடன் கூறினார்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தில் தமிழக அரசின் இலவச டிவி வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் இராஜ்குமார், சிவசங்கர், மாவட்ட ஊராட்சித்தலைவர் கொடியரசி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் 720 பயனாளிகளுக்கு இலவச தொலைக்காட்சிகளை வழங்கி மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 75 ஆயிரம் இலவச வண்ண தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஆயிரம் தொலைக்காட்சிகள் விரைவில் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் அதிகளவில மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரூ.ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி, சத்துணவில் வாரம் மூன்று முட்டை, ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி, ஏழை பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் கூறினார்.

தமிழக அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து மத்திய அரசும் ரூ.60 ஆயிரம் கோடியை விவசாய கடன் தள்ளுபடி செய்தது. தமிழக மக்கள் நோய், நொடியின்றி வாழ்வதற்காக, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஏழை, எளிய மக்களும் ரூ.1 லட்சம் வரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்று பயனடையலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில், காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா, கோட்டாட்சியர் உதயகுமார், வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேறொரு விழா,

ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை குத்து விளக்கேற்றி மத்திய அமைச்சர் ஆ.ராசா திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆபிரகாம், சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கர், மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம், ஊராட்சித்தலைவர் மல்லிகா ராமசாமி ஆகியோர் கலந்துகொடனர்..

Read more...

Saturday, October 10, 2009

ஜெனிவாவில் அமைச்சர் ஆ.இராசா - ஹாமாடோன் ஐ டொரி சந்திப்பு


மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தின் செயல் இயக்குனர் டாக்டர் ஹாமாடோன் ஐ டொரியை ஜெனிவாவில் 07.10.2009 அன்று சந்தித்து பேசினார்.

Read more...

Thursday, October 01, 2009

கலைஞருக்கு அண்ணா விருது வழங்கியது தகுமா? : அமைச்சர் ஆ.இராசா விளக்கம்

அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தி.மு.க. அறக்கட்டளை சார்பில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது. கலைஞர் அண்ணா விருது பெற காரணமாக இருப்பது எது? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

முதலமைச்சர் கலைஞர், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி முன்னிலையிலும் கவிஞர் வாலி தலைமையிலும் நடந்த இக்கருத்தரங்கில், சுப.வீரபாண்டியன், நடுவண் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஜெகத்ரட்சகன், நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, முன்னாள் அமைச்சர் தென்னவன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இந்தக் கருத்தரங்கில் ”கலைஞர், அண்ணா விருது பெற காரணமாக இருப்பது பகுத்தறிவுக் கொள்கையே” என்று வாதிட்ட அமைச்சர் ஆ.இராசாவின் உரை அடங்கிய காணொலியை வெளியிடுகிறோம்.


Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO