#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Thursday, November 05, 2009

தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் பொது சேவை மையங்கள் நிறுவப்படும் : அமைச்சர் ஆ. இராசா தகவல்


புது தில்லியில் 27.10.2009 தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களின் மாநாட்டை துவக்கி வைத்து மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா உரையாற்றினார்.

............................................................................................................................................................
புது தில்லி:

தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் பொது சேவை மையங்கள் நிறுவ மேலும் கூடுதலாக 1.50 இலட்சம் பொது சேவை மையங்கள் அமைக்க தகவல் தொழில்நுட்பத் துறை திட்டம் தயாரித்திருப்பதாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் ஆ. இராசா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :

இந்தப் பொது சேவை மையங்கள் பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் சேவைகளை அளிக்கும். அத்துடன் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம் முதலிய முக்கியத் திட்டங்களுக்கும் இம்மையங்கள் ஒத்துழைப்பு நல்கும்.

வர்த்தக விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் வர்த்தக நிறுவனங்கள் ரிட்டர்ன்களை பதிவு செய்தல், தாக்கல் செய்தல் தொடர்பான சேவைகள், வருமான வரி ரிட்டர்ன்கள் மற்றும் வருமான வரித் துறையின் திரும்ப வழங்குதல்கள், 28 தேசிய வங்கிகள் மூலமாக நேரடி மற்றும் மறைமுக வரிகளை ஆன்லைனில் செலுத்துதல், ஓய்வூதியதாரர்களின் இணையதளம் மூலமாக ஓய்வூதியதாரர்களுக்கு ஆன்லைன் சேவைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொது சேவைகள் தற்போது ஆன்லைனில் உள்ளன. இந்த தேசிய சேவைகளுடன் சேர்த்து கணினிமயமாக்கப்பட்ட உரிமைகள் பதிவேட்டை வழங்குவதற்கு நிலப் பதிவேடுகளையும் சொத்துக்கள் பதிவு செய்தலையும் மற்றும் பேப்பர் அடிப்படையிலான ஓட்டுனர் உரிமங்களை ஸ்மார்ட் கார்டுகளாகவும் பல்வேறு மாநிலங்கள் கணினிமயமாக்கியுள்ளன. இந்த நடவடிக்கைகள் சாதாரண மனிதனுக்கு அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு கணிசமான அளவில் நிவாரணம் கொண்டு வந்துள்ளது.

இந்த பொது சேவை மையங்களை நிறுவுதல் மற்றும் இணைப்பு கொடுப்பதில் உள்ள சிக்கலை தீர்த்தல் ஆகியவற்றில் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு சாதாரண மனிதனுக்கு அதிகாரம் வழங்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் தொழில்நுட்ப பயன்பாடு கிடைக்கும் வகையில் மத்திய அரசானது பாரத் செயல்பாட்டு முறை தீர்வுகள் (பிஓஎஸ்எஸ்) என்று பெயரிடப்பட்ட இந்திய தேவைகள் மற்றும் இந்திய மொழி உதவியோடு கூடிய ஜிஎன்யூ-லைனக்ஸ் உள்ளூர் டெஸ்க்டாப் விநியோகத்தை கொண்டு வந்துள்ளது. இது மின் ஆளுமை மற்றும் ஆன்லைன் கல்வியின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அரசும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவையுள்ளது. இந்த முயற்சியில் விரைவான அமலாக்கத்தை உறுதி செய்ய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். பொதுச் சேவைகளை வழங்குவதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக தேவையான சட்ட வழிமுறைகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. 2008-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டமானது மின்னாளுமையை விரைவாகவும் சிறப்பாகவும் செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் பொது மற்றும் தனியார் பங்களிப்பை சிறந்த முறையில் உறுதி செய்கிறது. இதன் பயனாக மின்னாளுமைத் திட்டங்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவது பலமடங்கு அதிகரித்துள்ளது. எம்சிஏ 21, பாஸ்போர்ட் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவை பொது சேவைகளை வழங்குவதில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்புக்கு சிறந்த உதாரணங்களாகும். இவ்வாறு அமைச்சர் ஆ.இராசா பேசினார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO