#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Thursday, November 04, 2010

ரூ. 50 ஆயிரம் கோடி ஊழலோ ஊழல்: சின்ன குத்தூசி

பா.ஜ.க.வினருக்கு போராட்டம் ஒரு கேடா?
=============
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை விட்டிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி ஏறத்தாழ பத்தாண்டு காலம் நடைபெற்றபோது அந்த ஆட்சியில் இதே தொலைத் தொடர்புத் துறையில் நடந்த இமாலய ஊழல்களை பொன். ராதாகிருஷ்ணன் மறந்திருப்பார் போலும். அவருக்கு தொலைத் தொடர்புத் துறையில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஐம்பதாயிரம் கோடி ஊழல் நடந்ததை நினைவுபடுத்திட விரும்புகிறோம்.

ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜெகன் மோகனை அந்த இலாக்காவிலிருந்து மாற்றிவிட்டு ஊழலுக்கு துணை நிற்கிறவராக இன்னொருவரை (யஷ்வந்த் சின்கா) நியமித்து ஊழலை தாராள மயமாக்கிய நிகழ்ச்சியை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அது வருமாறு :-

பங்குப் பத்திர ஊழலை மெகா ஊழல் என்று அழைத்தனர் என்றால் செல்லுலர் ஊழலை மஹா மெகா ஊழல் என்றும் 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஊழல் என்றும் வர்ணித்தனர். நல்ல பிரதமர், ‘ஜென்டில்மேன் பாலிடிஷியன்’ என்று சான்றிழ்கள் வழங்கப்பட்ட வாஜ்பாயின் நேரடிப் பார்வையில் நடந்த ஊழல் இது.

1998ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் காபந்து சர்க்காரை நடத்திய போது மிகத் துணிச்சலோடு நடத்தப்பட்ட இந்த ஊழலைக் குடியரசுத் தலைவர், தில்லி உயர்நீதிமன்றம், தேர்தல் கமிஷன் என முக்கிய அரசமைப்புச்
சட்ட அங்கங்கள் கண்டித்துள்ளன; ஆட்சேபித்துள்ளன.

ஊழல் மூலம் பிரதமர் வாஜ்பாயிக்கு நெருக்கமானவர்கள், பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்கள், பிரதமர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.300 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றனர் என்று அவுட் லுக் பத்திரிகை செய்தி வெளியிட்டது. செல்லுலர் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டதால் பத்து ஆண்டுகளில் ரூ.50,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இப்போது இந்த ஊழலின் அடிப்படைகளைக் காண்போம்.

1994ஆம் ஆண்டு தொலைபேசிக் கொள்கை அறிவிக்கப்பட்டபோது செல்லுலர் மற்றும் அடிப்படைத் தொலைபேசி வசதியை ஏற்படுத்தும் பணிகள் தனியாரிடம் அனுமதிக்கப் பட்டன. இதற்காகப் பகிரங்க டெண்டர்கள் கோரப்பட்டன. வட்டார வாரியாக உயர்ந்த ஒப்பந்தம் கோரியவர்களுக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டது. சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் செல்லுலர் தொலைபேசி வசதி செய்ய பத்து வருட காண்ட்ராக்ட் தரப்பட்டது. ஒவ்வொரு பெரு நகரத்திற்கும் இரண்டு கம்பெனிகளுக்கு காண்ட்ராக்ட் தரப்பட்டது. முதல் மூன்று ஆண்டுகளுக்குக் குறிப்பிட்ட அளவு லைசென்ஸ் கட்டணமும் எஞ்சியுள்ள ஏழு ஆண்டுகளுக்கு வெவ்வேறு கட்டண விகிதங்களும் நிர்ணயிக்கப்பட்டன.

உதாரணமாக, மும்பையில் செயல்படுகின்ற தனியார் தொலைபேசிக்காரர்கள் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது ஆண்டுகளுக்கு முறையே ரூ.3 கோடி, ரூ.6 கோடி, ரூ.12 கோடி லைசென்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். நான்காவது ஆண்டு முதல், ஆண்டு ஒன்றுக்கு, ஒவ்வொரு நூறு தொலைபேசிக்கும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். நான்கு முதல் ஆறாவது ஆண்டுகள் வரை குறைந்த அளவுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.18 கோடி செலுத்தவேண்டும். ஏழாவது ஆண்டிலிருந்து பத்தாம் ஆண்டு வரை ஓர் ஆண்டுக்குக் குறைந்த அளவு கட்டணம் ரூ.24 கோடியாகும்.

அடிப்படைத் தொலைபேசி வசதிகளைச் செய்து தருகின்ற தனியாரைப் பொறுத்த வரையில், மொத்தமுள்ள பணிகளில் தொலைபேசித் தொடர்புகளில் பத்து சதவிகிதத்தைச் சமூக நல உதவியாகக் கிராமங்களில் செய்து தருவதாக அரசிடம் உறுதியளித்திருந்தனர்.

ஒப்பந்தம் செய்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக எல்லா தனியார் காண்ட்ராக்டர்களும் லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தவில்லை. வாக்குறுதி அளித்தபடி கிராமப்புறங்களுக்கும் தொடர்பு வசதிகளைச் செய்து தரவில்லை. இந்தக் காண்ட்ராக்டர்கள் தொடர்ந்து லைசென்ஸ் கட்டணம் செலுத்தாததால் உயர்ந்து வந்த கட்டணப் பாக்கி குறித்து இந்தியக் கணக்குத் தணிக்கை அதிகாரி அடுத்தடுத்து கண்டனத்தை வெளியிட்டு வந்தார். தில்லி உயர்நீதி மன்றத்தில் இரண்டு பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன.

காண்ட்ராக்டர்கள் குறித்துக் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் அவர்கள் ஒன்று சேர்ந்து சில சலுகைகளைக் கோரினர். தாங்கள் நஷ்டம் அடைந்து விட்டதாகவும் அதனால் கட்டணப் பாக்கியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரினர்.

கட்டணம் செலுத்துவதற்கான கால அளவில் மாறுதல் செய்ய வேண்டும் என்றும் லைசென்ஸ் கட்டணம் எப்போது முதல் விதிக்கவேண்டும் என்பதில் மாற்றம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் பாரதி செல்லுலர் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் மிட்டல் அடிக்கடிப் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று வருபவர் என்பதாலும் பிரதமரின் வளர்ப்பு மகளின் கணவரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாலும் தொலைபேசி காண்ட்ராக்டர்கள் பிரச்சினையைத் தீர்க்கும் பெரும் பணியை அவர் எடுத்துக் கொண்டார்.

இதற்கிடையே காண்ட்ராக்டர்கள் ஒன்று சேர்ந்து தங்களிடையே லஞ்சப் பணத்தைத் திரட்டினர். சலுகைக்கேற்றபடி லஞ்சம் தரத் தயாரானார்கள். தொலைபேசித் தொழிலில் ஈடுபட்டுள்ள எஸ்ஸார் என்ற பெரிய நிறுவனம் உள்துறை அமைச்சர் அத்வானிக்கு நெருக்கமாக இருந்தது என்றும் தெரிகிறது.

தொலைத் தொடர்புத்துறை 1999 செப்டம்பரில் தற்காலிகமாக வாஜ்பாய் பொறுப்பில் இருந்தது. அப்போது தனியார் தொலைத் தொடர்பு ஒப்பந்தக்காரர்களின் வஞ்சகமான கோரிக்கைகளை அமைச்சரவை ‘பரிசீலனை’ செய்தது. அதனைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங்கைப் பின்னிருந்து இயக்கும் சக்தியாகக் கொண்டு ஒரு தொலைத்
தொடர்புக் குழு அமைக்கப்பட்டது. தனியார் தொலைத் தொடர்பு காண்ட்ராக் டர்களுக்கு ‘உதவி’ செய்வதற்கான வழி வகைகளைக் கண்டுபிடிப்பதுதான் அந்தக் குழுவின் மிகப்பெரிய பணியாகும்.
அந்தக் குழு தனது பணியைச் செய்து கொண்டிருந்த போது ஜக்மோகன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அமைச்சரும் பிரதமர் அலுவலகம் தொடங்கி வைத்த ‘நற்பணியைத்’ தொடர்ந்து நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்தது. ஒப்பந்தக் காரர்களின் கட்டணப் பாக்கி ரூ.300 கோடி என்ற அளவில் இருந்தது. ஆனால் அவர்களோ ரூ. 3.5 கோடியைத்தான் லைசென்ஸ் கட்டணமாகச் செலுத்தியிருந்தனர்.

மொத்தத் தொகையில் 20 சதவிகிதத்தைச் செலுத்த வேண்டும் என்று தொலைத் தொடர்புக் குழு கேட்டுக் கொண்டது. இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்று அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி தெரிவித்தார். ஆனால் ஒப்பந்தத்தின் ஷரத்துகளை மாற்ற வேண்டும் என்ற யோசனையை அட்டர்னி ஜெனரல் ஏற்கவில்லை.

1999 ஜனவரி 6ஆம் தேதி சோலி சோரப்ஜி இதுபற்றி எழுதிய குறிப்பில் லைசென்ஸ் தாரர்கள் பெரிய அளவு தொகையைக் கட்டணப் பாக்கியாக வைத்திருந்து விட்டு தவறான எதிர்பார்ப்பால் நிதி நெருக்கடி ஏற்பட்டுவிட்டது என்று கூறிப் பெரிய அளவில் தங்களுக்கு சாதகமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். இவர்களின் கோரிக்கைகளை ஏற்றால் அரசாங்கத்தின் செயல்பாடுகள் தவறான சமிக்ஞையை - தகவலைப் பரப்பக்கூடியதாக அமைந்துவிடும். கட்டண பாக்கியாளர்களுக்கு உதவுவதாக, ஊக்கம் தருவதாக அரசின் செயல்பாடு அமைந்து விடக்கூடாது என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்தச் சலுகைப் பிரச்சினை தொடர்பாகப் பொதுநல வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது ஒப்பந்தக்காரர்களில் ஒருவர் நிருபர்களிடம் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது ஜக்மோகன் அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதற்கு எத்தனை மணி நேரம் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக் கிறார் என்பதுதான். அந்தத் தகவலும் தில்லி பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது. இச்செய்தி வெளியான அடுத்த நாளே 1999 ஜூன் 8ஆம் தேதி ஜக்மோகன் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுவிட்டார்.

அதன்பின்தான் தகவல் தொடர்புத் துறையைப் பிரதமர் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். தொலைபேசி காண்ட்ராக்டர் களுக்குக் கொண்டாட்டம் அதிகமானது. தனியாரின் கோரிக்கைகளை நிறை வேற்றும் வகையில் புதிய கொள்கையை வரையுமாறு பிரதமர் அலுவலகத்தில் உள்ள செயலாளர் ஒருவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ஒப்பந்தத்தில் மாறுதல் செய்யக்கூடாது என்று அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கூறியிருந்ததால் அவரது திருத்தப்பட்ட கருத்து இப்போது தேவைப்பட்டது. அதனால் பிரிட்டனில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த சோலி சோரப்ஜி வரவழைக்கப்பட்டார். புதிய கொள்கைக்கு ஏற்ற மாற்றுக் கருத்தைத் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். சோரப்ஜியின் இந்தக் குறிப்பு மூலம் மத்திய அரசு தனியாருக்குச் சலுகை தர ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளது என்ற உண்மை தெரிய வந்தது.

கட்டணத்தைச் செலுத்தியவர்களையும் செலுத்தாத வர்களையும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் போக்கு தவறானது. இந்தப் போக்குக் காரணமாக ஒழுங்காகக் கட்டணம் செலுத்துபவர்கள் இடையே கட்டணம் செலுத்தும் ஆர்வம் குறைந்துவிட்டது என்று சோரப்ஜி தனது குறிப்பில் தெரிவித்துள்ளார். சோரப்ஜியின் இந்தச் சந்தேகம் சரியானது என்பது நிரூபணமாகிவிட்டது. கோஷிகா உள்பட இரண்டு கம்பெனிகள் 20 சதவிகித பாக்கியையும் செலுத்தவில்லை. இந்தப் பாக்கியைச் செலுத்தியே தீரவேண்டும் என்று அமைச்சர் ஜக்மோகன் வலியுறுத்தினார். ஒப்பந்த நிபந்தனைகளை மாற்றுவதற்கு எதிர்ப்பையும் தெரிவித்தார்.

ஒப்பந்த நிபந்தனைகளை மாற்றுவதற்கு எதிராக ஜக்மோகன் 11 கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகள் வருமாறு :-

1. போட்டி முறையில் ஒருவரை ஒப்பந்ததாரராகத் தேர்ந்தெடுத்து அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு, அந்த ஒப்பந்த உறுதி மொழிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது சட்டப்படியோ, அரசமைப்புச் சட்டப்படியோ, நிதி வருமான அடிப்படையிலோ, வணிக ரீதியாகவோ, ஒழுக்க ரீதியாகவோ நியாயமான செயலா?

2. அரசுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.4000 கோடி பாக்கியை வசூலிக்காமல் இருப்பது பற்றிப் பொதுமக்கள், பத்திரிகைகள், நாடாளுமன்றம், ஆடிட்டர் ஜெனரல், கோர்ட் ஆகியோர் என்ன நினைப்பார்கள்?

3. சில கம்பெனிகள் அவற்றின் பங்கு முதலீட்டை விற்று மிகப் பெரிய அளவுக்கு லாபம் அடைந்துள்ளன. அப்படி இருக்கும் போது அவர்களுடைய தொழில் நன்றாக நடைபெற வில்லை என்றால் இது சாத்தியமானதா? அந்தக் கம்பெனியில் சலுகைகளைக் கோரி இப்போது கொடுத்து வருகின்ற நிர்ப்பந்தம் தங்களது பங்கு முதலீட்டை அதிகரித்துக் கொள்வதற்கான தந்திரம் இல்லையா?
4. பெரும்பாலான அடிப்படைக் கட்டுமானப் பணிகளுக் கான முதலீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர் காலத்தில் கிடைக்கக்கூடிய வருமானத்தைச் சேர்த்துக் கணக்கிட வேண்டிய நிலையில், சந்தாதாரர்களின் எண்ணிக்கை மிக விரைவாகக் கூடிக் கொண்டே போகின்ற நிலையில் இந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று அந்தக் கம்பெனிகள் சொல்வது என்ன நியாயம்?

5. லைசென்ஸ்தாரர்கள் உண்மையில் நஷ்டம் அடைந்திருப்பார்களானால் அவர்களில் ஒருவர்கூட லைசென்சைத் திருப்பித்தர முன்வராதது ஏன்? ஒரு தொழில் முயற்சியில் நஷ்டமடைகிற யாராக இருந்தாலும் அந்தத் தொழிலைத் தொடர்ந்து செய்து நஷ்டத்தைப் பெருக்கிக் கொண்டே இருப்பார்கள் என்று சொல்வது அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறதா?

6. தொழில் லாபமாக இல்லை என்றால் புதிய லைசென்ஸ்தாரர்களையும் டெலிலிங்க் 1998 மார்ச்சிலும், ஸ்ரீனிவாஸ் செல்காம் 1998 மே-யிலும் செல்லுலார் வசதித் தொழிலில் ஈடுபட முன் வந்திருப்பது எப்படி?

7. லைசென்ஸ்தாரர்கள் எதிர்பார்த்ததை விட கணக்கிட்டதைவிடக் கூடுதல் லாபம் பெற்றிருந்தார்கள் என்றால் தங்கள் லாபத்தை அரசிடம் தரத் தயாராக இருந்திருப்பார்களா?

8. தனியார் துறைகளின் சுதந்திர வர்த்தகத்தை ஆதரிப்பவர்கள் எப்படி அரசின் தலையீட்டை எதிர் பார்க்கிறார்கள்?

9. ஒவ்வொரு கம்பெனிக்கும் தனித்தனியே வெவ்வேறு வட்டாரங்கள் செயல்பாட்டுக்காகப் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கம்பெனியும் தனித்தனியே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் அவர்கள் ஒன்றுபட்டு ஒரே வகையான கோரிக்கையை எழுப்புவது நியாயமா?

10. லைசென்ஸ் விதிமுறைகள் உறுதியாகப் பின்பற்றப் படாவிட்டால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடாதா? வேறு துறைகளில் உள்ள தொழில் முனைவர்களும் ஒப்பந்த விதிகளை மீறும் வகையில், இதுபோன்ற கோரிக்கைகளை எழுப்புவார்களே? ஒப்பந்த நிபந்தனை களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வதும் மீறுவதும் நடைமுறை ஆகிவிடாதா?

11. சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டுள்ள எந்த நாட்டிலாவது திறந்த ஒப்பந்தம் மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் தலையீடு நடைபெற அனுமதித்துள்ளனரா?

ஐக்மோகனின் இந்த 11 முக்கியமான கேள்விகள் தொலைபேசி ஒப்பந்ததாரர்களுக்கும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள காப்பாளர்களுக்கும் மிகுந்த சிக்கலைத் தந்தன. தங்கள் விருப்பப்படி ஆடவேண்டும் என்று ஜக்மோகன் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அவர் மசியவில்லை. இதற்கு மாறாக 20 சதவிகிதப் பாக்கியைச் செலுத்தத் தவறிய இரண்டு கம்பெனிகளின் லைசென்சை ஜக்மோகன் ரத்து செய்து விட்டார். பெருநகரங்களில் உள்ள எட்டு மிகப்பெரிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வந்தார். இவைகளில் 1999 ஜனவரி 31ஆம் தேதி வரை பார்தி 28.74 கோடியும் பிபிஎல் 26.45 கோடியும், ஸ்டெர்லிங் 19.73 கோடியும் ஹட்சின்சன் 29.29 கோடியும் பாக்கி வைத்திருந்தன.

அமைச்சரின் உறுதியான நிலை பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் தொலைபேசி காண்ட்ராக்டர்களுக்கும் ஒரு தலைவலியாக உருவெடுத்துவிட்டது. இந்நிலையில் தான் தொலைத்தொடர்புதுறை அமைச்சர் பொறுப்பி லிருந்து, ஜக்மோகனை நீக்க நிர்பந்தங்களை உருவாக்கத் தொடங்கினர்.

அமைச்சரவை கூடிப் புதிய கொள்கைக்கு ஒப்புதலும் வழங்கிவிட்டது. தனியார் காண்ட்ராக்டர்கள் என்ற மிகப் பெரிய சுறா மீன்களின் முன்பு மத்திய அரசு சரணடைந்தது. இதற்கிடையே நிதித்துறை அமைச்சகத்தின் குறிப்பு, அமைச்சரவையின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆட்சேபித்தது. ஆனால் அரசு ஆறுமாத காலத்திற்கு லைசென்சைப் புதுப்பித்ததோடு அக்கால கட்டத்திற்கான லைசென்ஸ் கட்டணத்தையும் தள்ளுபடி செய்தது. இந்த வகையில் அரசு கஜானாவிற்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டது. இதன் மூலம் பிரிட்டனைச் சேர்ந்த பார்த்த சிவசங்கரன் மற்றும் ஸ்விஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்ஸார், ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சின்சன் மற்றும் பிபிஎல் ஆகியவை பயன்பெற்றன.

தொலைத் தொடர்புத் துறையின் மொத்தப் பணப் புழக்கம் ரூ.12,000 கோடியாகும். இதில் 60 சதவிகிதம் 4 பெருநகரங்களின் தொலைபேசி காண்ட்ராக்டர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. லைசென்ஸ் கட்டணம் ஒழிக்கப்பட்டு லைசென்ஸ் தாரர்கள் வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு மாறிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். செயல்பட ஆரம்பித்த பின்னர் நான்காம் ஆண்டில் ஒவ்வொரு காண்ட்ராக்டரும் ஒரு சந்தாதாரருக்கு ரூ.6023 தரவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் நான்காம் ஆண்டில் ரூ.300 கோடி நஷ்டம் என ஆரம்பித்து, பத்தாவது ஆண்டில் ரூ.50,000 கோடி வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவாக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் தொலைபேசி உறுதி செய்து தருகிற சமூக நலச் செயல்பாட்டுத் திட்டத்தையும் ரத்து செய்து மத்திய அரசு தனியாருக்கு உதவியாகக் கரிசனத்துடன் செயல்பட்டுள்ளது. இந்நிலை தொலைத் தொடர்புத் துறை நஷ்டத்தையும் தனியார் காண்ட்ராக்டர்கள் கொள்ளை லாபத்தையும் அடையும் நிலையை உருவாக்கியுள்ளது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

தனியாரைக் காப்பாற்றும் வகையில் செய்யப்படும் முயற்சி தவறு என்று குடியரசுத் தலைவர் தந்த யோசனையை மீறி மூன்று ஆண்டுகள் கட்டாமல் இருந்த கட்டணப் பாக்கியையும் காபந்து சர்க்காராக இருந்த பா.ஜ.க. அரசு ரத்து செய்திருக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து இடதுசாரிக் கட்சிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து சில சான்று ஆதாரங்களையும் வழங்கினார்கள். இதையடுத்து குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், வேறு துறைக்கு மாற்றப்பட்ட ஜக்மோகனை அழைத்து இப்பிரச்சினை குறித்து கேட்டறிந்ததாகத் தெரிகிறது.

தனியாருக்கு மூன்று ஆண்டுக் கட்டணத்தை ரத்து செய்யக்கூடாது என்று தெரிவித்து குடியரசுத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. இக்கடிதம் நிராகரிக்கப் பட்டது என்ற விவரம் சில பத்திரிகைகளில் வெளியானது. அப்படிச் செய்ததின் மூலம் அதிகாரபூர்வ மாகக் குடியரசுத் தலைவருக்குப் பதில் கடிதம் எழுதாமல் அவரை காபந்து சர்க்கார் அவமதித்துவிட்டது.

மொத்தத்தில் இந்த விவகாரத்தில் பல்லாயிரம் கோடி லஞ்சமாகப் பெறப் பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஜக்மோகனை மாற்றியது போல்தான் இப்பிரச்சினையில் ஒத்துழைப்புத் தராத நிதித்துறைச் செயலாளரும் மாற்றப்பட்டார் என்ற சந்தேகம் உருவெடுத்தது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் நன்னடத்தை விதிமுறைக்கு மாறாக இதுபோன்ற சலுகையை அளித்துத் தேர்தலுக்குப் பெருமளவு நிதியை பா.ஜ.க. திரட்டுகிறது என்ற புகாரை அடுத்து தேர்தல் கமிஷனும் அமைச்சரவை செயலாளருக்கு இப்பிரச்சினை குறித்து கடிதத்தை அனுப்பியது.

இது குறித்துக் கேள்வி எழுப்பத் தேர்தல் கமிஷனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று பிரதமர் அலுவலகம் கேள்வி எழுப்பியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘ஆர்கனைசர்’ பத்திரிகையும் தேர்தல் கமிஷனைக் கண்டித்து முழுப்பக்கக் கட்டுரையை வெளியிட்டது.

தனியார் தொலைபேசி உரிமையாளர்களுக்கு உதவியது சட்டப்படி சரி அல்லது தவறு என்பதைப் பொதுமக்களும் நாடாளுமன்றமும் தான் தீர்மானிக்க வேண்டும். அது தேர்தல் கமிஷன் அக்கறை காட்ட வேண்டிய விஷயமல்ல என்று ‘ஆர்க்கனைசர்’ எழுதியது. ஆனால் பா.ஜ.க.வோ இப்பிரச்சினை குறித்துப் பொதுமக்களிடமோ, ராஜ்யசபாவிலோ விவாதிக்க முன்வரவில்லை. இவ்விஷயத்தில் பா.ஜ.க. அரசு அவசரம் காட்டியது ஏன் என்று தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வரியவா கேள்வி எழுப்பினார்.

அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையும் அதைக் கேட்டுச் செயல்படவேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் அனுப்பிய கோப்பின் நகலும் பத்திரிகைகளுக்குக் கிடைத்துவிட்டன. அட்டர்னி ஜெனரலின் யோசனையை வாபஸ் பெறச் செய்தது ஏன்? கோர்ட்டில் தனது யோசனைக்கு மாறாக சோரப்ஜி வாதிட்டது ஏன்? இடையில் நடந்தது என்ன என்பதுதான் இந்த 50 ஆயிரம் கோடி ஊழல் பற்றிய கேள்விகள். என்று தலைசிறந்த எழுத்தாளரான தி.சிகாமணி தம்முடைய ‘ஊழலோ ஊழல்’ என்ற புத்தகத்தில் பா.ஜ.க. ஆட்சி காலத்து ஊழல்களை விரிவாக விளக்கி குறிப்பிட்டுள்ளார்.

- டெகல்கா அம்பலப்படுத்திய ராணுவத்துறை ஊழல்.

- யூ.டி.ஐ. நெருக்கடியில் பிரதமர் அலுவலகமே ஈடுபட்ட ஊழல்.

- கார்கில் போரின் போது ஆயுதம் வாங்கியதில் ஊழல்.

- சவப்பெட்டிகள் வாங்கியதிலும் ஊழல்

- பெட்ரோல் பங்கு ஒதுக்கீட்டில் ஊழல்

என்று பா.ஜ.க. ஆட்சி காலத்து ஊழல்களை அடுக்கி கொண்டே போகலாம். அப்போதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பா.ஜ.க. அமைச்சர்கள் பதவி விலக்கப் பட்டார்களா?

இராணுவத்துக்கு ஆயுதம் வாங்கியதில் ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜார்ஜ் பெர்ணான்டஸ் மட்டும் பதவி விலகினார். அவரையும் மூன்றே மாதங்களில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளான அதே இராணுவத் துறையில் மீண்டும் அமைச்சர் ஆக்கியதுதான் பா.ஜ.க. ஆட்சியின் ஊழல் வரலாறு.

இந்த லட்சணத்தில் ஆ.ராசா பதவி விலக்கப்பட வேண்டும் என்று பொன். இராதாகிருஷ்ணன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

- தங்களது ஆட்சியில் இமாலய ஊழல்களை புரிந்த இவர்களுக்கு போராட்டம் ஒரு கேடா.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO